பக்கம் எண் :

தமிழன் இதயம்105

  
கொடி வணக்கம்
 
  கொடி வணக்கமது செய்வோம்-நாட்டின்
குறைகள் நீங்கியினி உய்வோம்
முடி வணங்கிஅதைப் போற்றி-அதன்
மூன்று நிறக்குறிகள் சாற்றி.
(கொடி)
 
புதுமையான கொடி பாரீர்-வேறு
பூத லத்திலிலை தேரீர்
முதுமையா யெவர்க்கும் பொதுவாம்-வாழ்வின்
முறையைக் காட்டுவது இதுவாம்.
(கொடி)
 
பச்சையான ஒரு தோற்றம்-நமக்குப்
பக்தி வேண்டுமெனச் சாற்றும்
இச்சையான பொருள் கூடப்-பக்தி
இருக்க வேணுமதை நாட.
(கொடி)
 
துய்ய வெள்ளை நிறக் காட்சி-உண்மை
துலங்கு மென்பதற்குச் சாட்சி
மையமாக நிற்கும் மர்மம்-சத்யம்
மதங்கள் யாவினுக்கும் தர்மம்.
(கொடி)
 
துறவின் வர்ணமந்தக் காவி-உலகின்
துக்கப் பூட்டினுக்குச் சாவி
சிறையும் வீடுமதற் கொன்றே-என்னும்
சேதி ஓதுவதற் கென்றே.
(கொடி)
 
நடுவில் ராட்டை யென்று பார்ப்போம்-அதில்
நலிந்த பேர்க்குக் கஞ்சி வார்ப்போம்
வடுவிலாத தொழில் நூற்றல்-குடிசை
வாழும் ஏழைக்கென்று சாற்றல்
(கொடி)