பக்கம் எண் :

தமிழன் இதயம்123

  
  அடிமைக் குணத்தை அழித்து விடுதலை
ஆனந்தத் தில்நமக் காசை தந்து
கொடுமை சகிக்கும் அன்பின் வலிமை
கொடுத்தது நம்முடைய காங்கிரசே.

ஒளியறியாத விழிபோலும்-ஓர்
ஓசைப்படாத செவிபோலும்
களியறி யாதநம் அடிமையை மாற்றிக்
களிப்புறச் செய்திடும் காங்கிரசே.

 ‘காங்கிரஸ்’என்பது இந்திய நாட்டின்
கண்ணியம், கவசம் கேடயமாம்.
காங்கிரஸ் தன்னை இந்தியர் தம் இரு
கண்ணின் மணியெனக் காத்திடுவோம்.

பொன்முடி சூட்டி வணங்கிடுவோம்-இன்னும்
புத்துணர்வோடு பணிபுரியும்
நன்மைகள் யாவையும் காங்கிரசால் வரும்
நாடு செழித்திட நாம் வாழ்வோம்.
 

கம்பன் விழா
 
  செம்பொருளும் சொற்பெருக்கும் தெளிந்த ஞானம்
     தேடுகின்ற இலக்கியமும் செறிந்ததாகும்
நம்பெரிய தமிழ்மொழிக்குப் பெருமை நாட்டி
     நானிலத்தின் கவிஞருக்குள் தலைவன் என்று
அம்புவியின் பலமொழிகள் படித்தா ராய்ந்த
     அறிஞர்களில் பெரும்பாலார் ஆமோ திக்கும்
கம்பனுடைத் திருநாளில் கலந்தோர்க் கெல்லாம்
     கைகூப்பி வரவேற்போம்; கடவுள் காக்கும்.