பக்கம் எண் :

128நாமக்கல் கவிஞர்

  
  முக்கிமுக்கிப் பயின்றுபல முயற்சி செய்து
     மூக்காலும் வாக்குரைத்து, மூச்சு வாங்கத்
திக்குமுக்க லாடுகின்ற பாஷைக்கெல்லாம்
     சிறப்பாகும் சங்கீதத் திறமை யென்றும்
சிக்குமுக்கு உச்சரிப்புச் சிறிதும் வேண்டாச்
     சீரிலகும் எழுத்தியல்பு சேர்ந்த தாகித்
தக்கமிக்கோர் இனிமையெனும் தமிழில் நாதச்
     சங்கீதம் குறைவென்றால் தரிக்கலாமோ,

நாதமெனும் பிரமத்தைப் பணிவோம்; ஆனால்
     நாமறியா மொழியில் நமக் கேது நாதம்?
கீதமென்று புரியாத பாட்டைக் கேட்டுக்
     கிளர்ச்சிபெறா உணர்ச்சியிலே கீதம் ஏது?
வாதமென்ன? இதிலெவர்க்கும் வருத்தம் ஏனோ!
     வாய்மணக்கப் பிறமொழியை வழங்கி னாலும்
ஓதியதும் உணர்ந்ததுவும்தாய்ப்பா லோடு
     ஊட்டியதாம் தாய்மொழிபோல் உதவாதென்றும்.

கலையென்றால் உணர்ச்சிகளைக் கவரவேண்டும்,
     களிப்பூட்டி அறிவினைப் போய்க் கவ்வ வேண்டும்
நிலைகொள்ளாச் சிந்தனையை நிற்கச் செய்து
     நீதிநெறி தெய்வநினைப் பூட்டற் கன்றோ?
விலையில்லாப் பெருமைபல உடையதேனும்
     விளங்காத பாஷையிலே பாட்டைக் கேட்டுத்
தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட் டாலும்
     தனக்கதுவோர் கலையின்பம் தருவ துண்டோ?

சங்கீதம் பாடுவதற்கும் மொழிக்கும் என்ன
     சம்பந்தம் என்றெவரும் சாதிப் பாரேல்,
இங்கேதும் தடையில்லை ஏற்றுக் கொள்வோம்;
     எல்லாமே தமிழ்ப் பாட்டா யிருந்தாலென்ன?