பக்கம் எண் :

130நாமக்கல் கவிஞர்

  
திருமுடி சூட்டிடுவோம்
 

பல்லவி

 
திருமுடி சூட்டிடுவோம்-தெய்வத்தமிழ்மொழிக்கு
(திரு)
 


அனுபல்லவி

 
 
வருமொழிஎவருக்கும் வாரிக்கொடுத்துதவி
வண்மைமிகுந்த தமிழ் உண்மை உலகறிய
(திரு)


சரணங்கள்

 
பெற்றவளை இகழ்ந்து மற்றவரைத் தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்ற அரசிழந்து உரிமை பெருமை குன்றி
உள்ளம் வருந்தினதால் பிள்ளைகள் சீர்குலைந்தோம்
 

(திரு)
 
  அன்னையை மீட்டும்அவள் அரியணை மீதிருத்தி
அகிலம் முழுதும்அவள் மகிமை விளங்கச் செய்வோம்
முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமை பெற்று
முத்தமிழ்ச் செல்வியவள் சித்தம் குளிர்ந்திடவே
(திரு)
 
தாயின் மனம் குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு
தாரணி தன்னில் நம்மை யாரினிமேல் இகழ்வார்
நோயும் நொடியும் விட்டு நுண்ணறி வோடு நல்ல
நூலும்கலைகளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம்
(திரு)