பக்கம் எண் :

தமிழன் இதயம்131

  
கைத்தொழில்
 
  கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
   கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
   இருந்திடல் உனக்கே சரியாமோ
 
(கை)
 
  உழவும் தொழிலும் இல்லாமல்
   உலகில் ஒன்றும் செல்லாது
விழவும் கலையும் விருந்துகளும்
   வேறுள இன்பமும் இருந்திடுமோ
 
(கை)
 
  காட்டிலும் மேட்டிலும் களைப்போடு
   கஷ்டப் படுவோர் உழைப்பின்றி
வீட்டினில் சாதம் வெந்திடுமோ
   வேறெதும் உணவைத் தந்திடுமோ
 
(கை)
 
  நெசவுக் காரர்கள் நெய்யாமல்
   நிலத்தவர் உடைக்கென் செய்வார்கள
குசவன் செய்திடும் பாண்டமன்றோ
   குடித்தனம் நடந்திட வேண்டுமென்றும்
 
(கை)
 
  கொல்லரும் தச்சரும் கூடாமல்
   கூடமும் மாடமும் வீடாமோ
கல்லடி சிற்பியும் தச்சருமே
   காரியம் பலவினுக் கச்சாணி
 
(கை)
 
  சலவை சவரம் செய்தாலும்
   சாக்கடை கழுவுதல் செய்தாலும்
உலகுக் கதனால் உபகாரம்
   ஒன்றும் தெரியார் வெறும்பாரம்
 
(கை)