பக்கம் எண் :

தமிழன் இதயம்139

  
கோலாட்டம்
 

பல்லவி
 

  கொஞ்சும் கிளிமொழிக் கோதையரே நாம்
கூடியாடுவோம் கோலாட்டம்
 


அனுபல்லவி

 
மிஞ்சும் பலவித நோய்கைளத் தடுத்திட
மெல்லியலே வழி சொல்லிடுவோம்.
 


சரணம்

  நோய்கள் மிகுந்தது எதனாலேயென்று
நுண்ணறிவோடதை எண்ணிடுவோம்
தாய்கள் குழந்தையை வளர்த்திடும் வழிகளைச்
சரிவரச் செய்திடத் தெரிவதில்லை.
(கொ)
 
பிஞ்சில் வெதும்பிய காய்கறியென்றும்
பெரிதாய்ச் செழித்ததைக் கண்டதுண்டோ
அஞ்சில் கெட்டது அம்பது வயதிலும்
அழியா திருப்பினும் செழியாது.
(கொ)
 
தாயும்தந்தையும் தவறு செய்தாலது
தனயரைச் சேர்வது பொய்யாமோ
சேயைச் சிசுவினில் கவனிக்கா விடில்
சென்மத்தால் வரும் நன்மையுண்டோ
(கொ)
 
கருவில் வளர்ப்பார் கடவுள் பூமியைக்
கண்டபின் வளர்ப்பது நாமன்றோ
அறிவின்நாமதை அறிந்தே வளர்த்திடில்
ஆயுள் நீண்டிடும் நோயுமில்லை.
(கொ)