பக்கம் எண் :

142நாமக்கல் கவிஞர்

  
  அணியிலே ஆடையாலே
     அலங்கரித் தோமேயன்றி
அறிவிலா ஆசாரத்தால்
     அழகெதும் செய்தோமில்லை
பணியிலும் பணத்திலேயே
     சுகமெலாம் இருந்தாற்போல
பழகினோம் நாமேயன்றிப்
     பழக்கினோம் மக்கள் தம்மை
துணிவிலோம் தூய்மையில்லோம்
     சுசிகர நடத்தையில்லோம்
துவக்குவோம் இனிமேலேனும்
     நோய்களும் துடைக்கும் வாழ்க்கை.

மணத்தையே விரும்பியோடு
     மலரினைக் கசக்குவார்போல்
பணத்தையே பெரிதென்றெண்ணிச்
     சுகத்தினைப் பழித்து வாழ்ந்து
குணத்தையே விலைக்கு விற்றுக்
     குரங்கினைக் கொண்டாற்போல
இனத்தையே பிணிகள் வாட்ட
     இருந்தனம் அறிவிருந்தும்,

உண்டியில் ஆசைவைத்தோம்
     ஒழுக்கமே மறந்து போனோம்
பெண்டினார் மக்கள் தம்மை
     வளர்த்திடும் முறைமைபேணார்
மண்டையி லெழுத்திதென்று
     மயங்கினோம் கர்மம்தன்னை
மண்டன நோய்கள் க்ஷாமம்
     மலிந்திட நலிந்தோமையோ.