பக்கம் எண் :

தமிழன் இதயம்15

  
  துன்பமிக்க அடிமைவாழ்வில்
     தோய்ந்திருந்த என்மனம்
சோகம்விட்டு விடுதலைக்கு
     மோகமுற்றி விட்டதே.
 

முருகன்மேற் காதல்
 
  முருகனென்று சொன்னால் தோழீ!
உருகு தென்றனுளம் என்னே!
பெருகி நீர்விழிகள் சோர-மனம்
பித்துகொள்ளுது உள்ளூர
 
(முரு)
  கந்தனென்று சொலும் முன்னே-என்
சிந்தை துள்ளுவது என்னே!
உந்தும் பேச்சுரைகள் உளறி-வாய்
ஊமை யாகுதுளம் குளிர
 
(முரு)
  வேலனென்ற பெயர் கேட்டு-ஏனோ
வேர்வை கொட்டுதுதன் பாட்டில்
காலமென்ற பயம் ஓடி-புது
களி சிறக்குதடி சேடி.
 
(முரு)
  குமரனென்ற ஒரு சத்தம்-கேட்டு
குளிர வந்ததடி சித்தம்
அமர வாழ்வுபெறல் ஆனேன்-இனி
அடிமை யார்க்குமிலை நானே.
 
(முரு)
  குகனெனச் சொல்வதற் குள்ளே-நான்
அகம் மறந்தேன் அது கள்ளோ!
தகதகவென் றொரு காட்சி - உடனே
தண்ணெனமுன் வரல் ஆச்சு,



(முரு)