சமரச சன்மார்க்கம் | | எல்லா மதத்தினரும் கூடுவோமே ஏகம் கடவுளென்று பாடுவோமே நல்லார் உலகிலெங்கும் சொன்னது ஒன்றே ராமகிருஷ்ணர் வாழக்கையினால் கண்டோம் இன்றே இற்றைக்கு நூறாண்டு முன்னம் ஒரு நாள் இந்நாட்டின் தெய்விகத் தன்மைக ளெல்லாம் புத்தம் புதுஉருவில் தேவையறிந்தே போந்ததென ராமகிருஷ்ண தேவர் பிறந்தார். பள்ளிப் படிப்பெதும் இல்லாமலும் பாடம் வேறொருவர் சொல்லாமலும் வெள்ளம் பலநிறைந்த கடலே போல் வெவ்வேறு மதங்களுக் கிடமானார். தானே நினைத்தறியும் படிப்பன்றோ தன்னைத் தேற்றுவிக்க முடிப்பாகும் ஊனோ டுயிர்கலந்த ஒழுக்கமன்றோ உண்மை ராமகிருஷ்ணர் வழக்கமெல்லாம். ஏட்டுப் படிப்பை மட்டும் கற்றோமே ஏழைக் கிரங்கு மன்பைப் பெற்றோமா? நாட்டில் நலிந்தவர்க்காய் அழுதுருகும் ராமகிருஷ்ணர் தம்கருணை தொழுதிடுவோம். சோறும் துணியும்மட்டும் தேடினோமே துன்பம் குறைக்குமருள் கூடினோமா? கூறும் ராமகிருஷ்ணர் கதை படிப்போம் கூடும் கவலைகளின் முனை ஒடிப்போம். வீடும் மனையும்மட்டும் கட்டினோமே விமலன் அருளைக் கொஞ்சம் கிட்டினோமா? | | |
|
|