பக்கம் எண் :

தமிழன் இதயம்23

  
  பாடும் ராமகிருஷ்ணர் சரித்திரத்தைப்
படித்து ஜெயித்திடுவோம் தரித்திரத்தை.

மக்கள் மனைவிபொருள் நல்லதேதான்
மற்றும் பெரியசுகம் இல்லையோ தான்?

மிக்கபெரிய இன்பம் கொண்டபெரியார்
மேலோர் ராமகிருஷ்ணர் கண்டு தெரிவோம்

உடலுக் கணிகள் பல பூண்டோமே
உயிருக் கழகுசெய்ய வேண்டாமோ?
கடனுக் கழுதுசெய்யும் பூசனையெல்லாம்
கட்டாது ராமகிருஷ்ணர் பேசினதுகேள்.
 

உலகம் வாழ்க!
  கவிபாடிப் பெருமை செய்யக் கம்ப னில்லை
     கற்பனைக்கிங் கில்லை அந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்கு த்யாக ரில்லை
     தேசிய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
     புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா
     உத்தமராம் காந்தியரை உவந்து பேச

சொல்லுவது எல்லார்க்கும் சுலப மாகும்
     சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்
எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள்
     எழுதியது பிறருக்கே; தமக்கென் றெண்ணார்
தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
     சொன்னதுபோல் செயல்முயன்றார் இவரைப் போல
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
     இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.