பக்கம் எண் :

24நாமக்கல் கவிஞர்

  
  கொலைகளவு பொய்சூது வஞ்ச மாதி
     கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு
தலைசிறந்த பிறவியென்னும் மனித வர்க்கம்
     சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி
உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ
     ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி
விலை மதிக்க முடியாத செல்வ மன்றோ
     வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்.

புத்தர் பிரான் பெருந்துறவைப் படிக்கும் போது
     போதிமா நிழல்ஞானம் நினைக்கும் போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவைதன்னில்
     களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும்
சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த
     தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போது
உத்தமரைக்  ‘கண்டோமா’ என்னும் ஏக்கம்
     ஒவ்வொரு நாள் நமக்கெல்லாம் உதிப்பதுண்டே.

 ‘குத்தீட்டி ஒரு புறத்தில் குத்தவேண்டும்
     கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம்வரத் தடியடியால் ரணமுண் டாக்கி
     நாற்புறமும் பலர்உதைத்து நலியத் திட்ட
அத்தனையும் நான்பொறுத்து அஹிம்ஸை காத்து
     அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்து உதட்டில் சிரிப்பி னோடும்
     உயிர் துறந்தால் அதுவேஎன் உயர்ந்த ஆசை’.

என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப்பார்த்தால்
     எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகு மன்றோ
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
     நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ