பக்கம் எண் :

28நாமக்கல் கவிஞர்

  உத்தமன் காந்தி  
 
உள்ளம் உருகுது கள்ளம் கருகுது
     உத்தமன் காந்தியை நினைந்து விட்டால்
வெள்ளம் பெருகிடக் கண்ணீர் வருகுது
     வேர்க்குது இன்பம் தேக்குதடா . . .

சித்தம் குளிர்ந்துள பித்தம் தெளிந்திடும்
     சீரியன் காந்தியின் பேர் சொன்னால்
புத்தம் புதியன முற்றும் இனியன
     பொங்கிடும் உணர்ச்சிகள் எங்கிருந்தோ . . .

கிளர்ச்சிகொண் டான்மா பளிச்சென மின்னுது
     கிழவன் காந்தியின் பழமை சொன்னால்
தளர்ச்சிகள் நீங்கிய வளர்ச்சியில் ஓங்கிய
     தாட்டிகம் உடலில் கூட்டுதடா. . .

சோற்றையும் வெறுக்குது காற்றையும் மறக்குது
     சுத்தன்அக் காந்தியின் சக்தி சொன்னால்
கூற்றையும் வெருட்டிடும் ஆற்றலைத் திரட்டிடக்
     கூடுதடா மனம் தேடுதடா

தூக்கமும் கலைந்தது ஏக்கமும் குலைந்தது
     துன்பக் கனவுகள் தொலைந்ததடா
வாழ்க்கையும் திருந்திட நோக்கமும் விரிந்தது
     வள்ளலக் காந்தியின் நினைப்பாலே . . .

வஞ்சனை நடுங்கிடும் வெஞ்சினம் அடங்கிடும்
     வாய்மையன் காந்தியின் தூய்மை சொன்னால்
அஞ்சின மனிதரும் கெஞ்சுதல் இனியில்லை
     ஆண்மையும் அன்பும் அருளுமடா . . .