பக்கம் எண் :

56நாமக்கல் கவிஞர்

   ‘அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும்
     பழியஞ்சித் தன் கையை அரிந்த கோனும்
தருமமிலைக் கோவலனைக் கொன்ற தென்று
     தானறிந்த அக்கணமே சவமாய் வீழ்ந்த
பெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர்
     பித்தடிமைக் குற்றேவல் பிழைத்தீ’ரென்று
உருகிமனம் விரிந்துயரும் கவிக ளாலே
     உணர்வளித்த பாரதியின் உரைதான் என்னே!
 
 
பாரிமுதற் சடையப்ப வள்ள லென்று
     பாவலர்கள் நாவிலுறை பலபேர் வாழ்ந்து
சீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை
     திசையனைத்தும் போயொலிக்கச் செய்த நாட்டில்
ஊழியநற் சுவையொழுகும் கவிக ளாலே
     ஊக்கமிகத் தமிழ்நாட்டிற் குணர்வைத் தந்த
பாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப்
     பார்த்திருந்த தமிழருற்ற பழிதான் என்னே!
 
 
சோற்றினுக் கறிவை விற்றுத் துர்த்தரைப் புகழ்ந்து பாடிச்
     சோம்பரைச் செல்வ ரென்று தொழுதுடல் சுகித்து வாழ்ந்து
கூற்றினுக் குடலம் போகக் குப்பையிற் கவிகள் சேரக்
     குறிவிடா திறந்து போகும் கவிகளின் கூட்டம் சேரார்
வேற்றவர்க் கடிமை நீங்கும் விடுதலை வரமே வேண்டி
     வீரமும் ஞானம் பொங்கச் சக்தியின் வேள்வி பாடி
நாற்றிசை தமிழ ரெங்கும் நாட்டினை பணியச் செய்த
     நாவலர் சுப்ர மண்ய பாரதி நாமம் வாழ்க.