பக்கம் எண் :

தமிழன் இதயம்87

  
  திசைச்சொல்லுக் கென்றுதனி இடங்கொடுத்தார்
     இலக்கணத்தில் தெரிந்த முன்னோர்
இசைச்சொல்ல இதைப்போல வேறுமொழிக்
     கிலக்கண நூல் எங்கே காட்டு.

எந்தமொழி வந்திடினும் தமிழ்மொழியை
     என்னசெய்யும் என்றே முன்னோர்
வந்தபிற மொழியையெல்லாம் வரவேற்றுத்
     தமிழ்மொழியை வளரச் செய்தார்
செந்தமிழின் சரித்திரத்தைத் தெரியாமல்
     மக்களுக்குத் திரித்துக் கூறி
இந்திமொழி வந்ததென்று இகழந்துரைப்போர்
     தமிழ்நாட்டின் பெருமை எண்ணார்.

பூச்சிபுழு உயிர்களையும் சமமென்று
     போற்றினவர் தமிழ ராவார்
பேச்சிலுள்ள வேற்றுமைக்கு மனிதர்களைப்
     பிரித்துவிடத் தமிழர் பேசார்
ஏச்சிலொரு இன்பமுள்ளார் எக்காலும்
     தமிழர்களின் இனத்தைச் சேரார்
கூச்சலிட்டு வசையுரைப்போர் கொச்சைகளே
     அதற்குநல்ல சாட்சி கூறும்.

வேறெவரும் நுழையாமல் வேலியிட்டுத்
     தமிழ்நாட்டார் வாழ்ந்த தில்லை
கூறுபடும் பலநாட்டார் கூடித்தங்கிக்
     குலவியதித் தமிழர் நாட்டில்
மாறுபடும் பலமதமும் மருவிமனம்
     கலந்ததெங்கள் தமிழன் மாண்பு
தேறிமனம் தெளிவடைவோம் தமிழர்களின்
     பெருங்குணத்தைத் தெய்வம் காக்கும்.