பக்கம் எண் :

தமிழன் இதயம்97

  
  கொண்டகொள்கை அறம்விடாமல்
     உயிர்கொடுத்த வீரர்கள்
கோடிகோடி தமிழர்வாழ்ந்த
     கதைகள் வந்து குத்துது.
 
 
மண்டலத்தே இணையிலாத
     வாழ்வுண்ட தமிழகம்
மகிமைகெட்டு அடிமைப்பட்டு
     மதிமயங்கி நிற்பதேன்?
செண்டெழுந்தா லென்னப்பாய்ந்து
     தேசமுற்றும் சுற்றி நீ
தீரவீரம் நம்முள் மீளச்
     சேருமாறு சேவைசெய்.

அன்பினோடு அறிவுசேர்ந்த
     ஆண்மைவேண்டும் நாட்டிலே
அச்சமற்ற தூயவாழ்வின்
     ஆற்றல்வேண்டும் வீட்டிலே
இன்பமான வார்த்தைபேசி
     ஏழைமக்கள் யாவரும்
எம்முடன் பிறந்தபேர்கள்
     என்ற எண்ணம் வேண்டுமே.

துன்பமான கோடிகோடி
     சூழ்ந்துவிட்ட போதிலும்
சோறு தின்ன மானம்விற்கும்
     துச்சவாழ்வு தொட்டிடோம்
என்பதான நீதியாவும்
     இந்தநாட்டில் எங்கணும்
இளந்தமிழா! என்றும் நின்று
     ஏடெடுத்துப் பாடுவாய்.