பக்கம் எண் :

108சாமி சிதம்பரனார்

New Page 1

ஏலாதியின் பாடல்கள் படிப்பதற்குக் கொஞ்சம் கடபுடாவென்றுதான்
இருக்கும். செய்திகளையும், சொற்களையும் எண்ணி எண்ணி எடுத்துக்
கோத்திருப்பது போலவே காணப்படும். சில பாடல்களுக்கு மிகவும்
முயன்றுதான் பொருள்காண வேண்டும். ஒவ்வொரு வெண்பாவிலும் ஆறு
செய்திகளைச் சொல்லவேண்டும் என்னும் எண்ணத்துடன் பாடப்பட்ட
பாடல்கள் இவை. ஆதலால சரளமாகப் பாடமுடியவில்லை. மிகவும்
முயன்றுதான் இந்நூலாசிரியர் இவ்வெண்பாக்களைப் பாடியிருக்கின்றார்.
ஆயினும் சில பாடல்கள் சரளமாக அமைந்திருக்கின்றன. அவை
இந்நூலாசிரியரின் ஆற்றலுக்கு அடையாளமாகும். நாலுவரிகளிலே ஆறு
பொருள்களைக் கூறுவதற்குச் சிறந்த அறிவும் ஆற்றலும் வேண்டும்.

ஏலாதியில் கூறப்படும் சில செய்திகள் இக்காலத்திற்கு ஏலாதன.
வடமொழி நூல் வழக்குகள் பலவற்றை இவ்வாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே வடசொற்கள் மிகுதியாகக் கலந்திருக்கும்
நூல் இது ஒன்றுதான். சொல்லியவையே பல பாடல்களிலே திரும்பத்
திரும்பச் சொல்லப்படுகின்றன. அவை நீதியை வலியுறுத்துவதற்காகக்
கூறப்படுகின்றன என்று சொல்லப்படலாம். ஆயினும் படிப்போர்க்கு அலுப்பு
தட்டாமற் போகாது. போற்றத்தக்க பல உண்மைகளும் இந்நூலிலே
காணப்படுகின்றன.

போற்றத்தக்க பாடல்கள்

ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிலே சென்று
அவ்வரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பவர் அரசாங்கத்தின் தூதர்.
ஒரு நாட்டின் பிரதிநிதியாகச் சென்று மற்றொரு அரசாங்கத்துடன்
பேசுவோரும் தூதராவார். இத்தகைய தூதர்களுக்கு வேண்டிய
தகுதிகளைப்பற்றி ஒரு வெண்பாவிலே கூறப்படுகின்றது.