பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்11

நூல

நூல்களின் சிறப்பு

பத்துப் பாட்டு எட்டுத்தொகை நூல்களைப் போலவே தமிழர்களின்
பண்டை வரலாற்றைக் காணப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் துணை
செய்கின்றன. தமிழர்களின் படிப்படியாக வளர்ந்து வந்த உயர்ந்த
பண்பாட்டை இந்நூல்களிலே காணலாம். தமிழர்கள் தனித்தனிக்குடும்ப
வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப் பொருள்
நூல்கள் சாட்சிகளாகும். அவர்கள் ஆன்மீகத் துறையிலும், அரசியல் முதலிய
புறத் துறைகளிலும் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர்
என்பதற்குப் புறப்பொருள் பற்றிய நூல்கள் சாட்சிகளாகும்.

சுருங்கக் கூறினால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மக்கள்
வாழ்க்கைக்கு வழி காட்டும் உயர்ந்த நூல்கள் என்று உரைக்கலாம்.
தமிழர்களின் பண்டைப் பண்பாட்டை அறிவதற்கு இவைகளை விடச் சிறந்த
சாதனங்கள் வேறு எவையும் இல்லை. ஆதலால் தமிழர்களின் பண்டைப்
பண்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களையெல்லாம் படிக்க வேண்டும். அவைகளைப்
படிப்பதன் மூலம் பல உண்மைகளை நாம் காணலாம். இனி அந்நூல்கள்
ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே சுருக்கமாகத் தெரிந்து
கொள்ளுவோம்.