பக்கம் எண் :

116சாமி சிதம்பரனார்

New Page 1

அனைவரும் ஆசாரத்தைப் பின்பற்றவேண்டும் என்றே பொதுவாகக்
கூறப்படுகின்றது. இந்த முறையே தமிழுக்குள்ள ஒரு தனிச்சிறப்பு.
சாதிக்கொரு நீதி கூறும் முறையைத் தமிழ் நூலார் பின்பற்றவில்லை.
பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த எல்லா நீதி நூல்களும் பெரும்பாலும்
எல்லோர்க்கும் பொதுவான நீதிகளையே கூறுகின்றன; அறங்களையே
அறிவிக்கின்றன. ஒரு சில பாடல்களில் மட்டும், அந்தணர், அரசர், வணிகர்,
வேளாளர் கடமைகளைத் தனித்தனியே வலியுறுத்துக்கின்றன.

ஆசாரக்கோவையை ஒரு பொதுச் சுகாதார நூல் என்றே
சொல்லிவிடலாம். எல்லா மக்களும் நோயற்ற வாழ்வு வாழ்வது எப்படி?
ஊரும், நாடும், பொது இடங்களும் சுகாதாரக் கேடின்றி இருப்பது எப்படி?
என்பவைகளை இந்நூலிலே காணலாம். புறத்திலே தூய்மையுடன் வாழ்வதற்கு
வழி கூறுவதோடு மட்டும் நின்று விடவில்லை. அகத்திலே அழுக்கின்றி
வாழ்வதற்கும் வழி காட்டுகின்றது இந்நூல். இது இந்நூலுக்குள்ள பெருமை.

இந்நூலாசிரியர் பெயர் பெருவாயின் முள்ளியார் என்பது. இவர்
வடமொழியிலும் புலமையுள்ளவர். ஆயினும் இவர் பாடல்களிலே வடமொழிச்
சொற்கள் அதிகமாகக் கலக்கவில்லை; வெண்பாக்கள் நீரோட்டம் போலவே
சரளமாக அமைந்திருக்கின்றன. இரண்டடி முதல் ஐந்தடி வரையில் உள்ள
வெண்பாக்கள் இதில் காணப்படுகின்றன. ஆசாரக் கோவையில் உள்ள
வெண்பாக்களின் எண்ணிக்கை நூறு.

ஆசாரத்திற்கு விதை

மக்களுடைய நல்லொழுக்கங்களுக்கு அடிப்படையான குணங்கள்
இவைகள்தாம் என்று முதற் பாட்டிலே கூறப்படுகின்றது. ‘‘ஆசாரத்திற்கு
விதை எட்டுக் குணங்கள்;