பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்141

New Page 1
  ‘‘யாதானும் நாடாமால், ஊர்ஆமால், என் ஒருவன்
சாந்துணையும் கல்லாத ஆறு
 

கற்றவனுக்கு எந்நாடும் தன்நாடே; எவ்வூரும் தன்னூரே; இவ்வாறிருக்க
ஒருவன் இறக்கும் வரையிலும் கல்வி கற்காமல் காலம் கடத்துவது ஏன்?

(கு.397)

இத்திருக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாடலும் ஒரே
கருத்தைக் கொண்டிருக்கின்றன. இக்குறளின் விரிவுரைபோல்
அமைந்திருக்கின்றது இப்பழமொழிப் பாட்டு. இப்பழமொழிப் பாட்டின்
கருத்துபோல் காணப்படுகின்றது குறள்.
 

  ‘‘கறுத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழ்ஆல்-ஒறுத்து ஆற்றின்
வான் ஓங்கு மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான்நோன்றிட வரும் சால்பு
 

வானை முட்டிய உயர்ந்த மலையையுடைய மன்னவனே! சினந்து நின்று
தமக்குக் கொடுமை செய்தவர்களின் குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு
நேர்மையான நெறியிலே நடப்பதுதான் பெருமையாகும்; புகழாகும்.

அப்படியில்லாமல் தாமும் சினங்கொண்டு அவர்களைத் தண்டிப்பதனால்
பயன் இல்லை. பொறுமையினால்தான் நல்ல பண்புகள் வளரும்’’. இது
பழமொழிச் செய்யுள்.
 

  ‘‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
 

தமக்குத் தீமை செய்தவரை எதிர்த்துத் தண்டித்தவர்க்கு ஒரே நாள்
இன்பந்தான் உண்டு. தீமையைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம்
அழியும் வரையினும் புகழ்உண்டு’’.

(156)