பக்கம் எண் :

New Page 1

18. நாலடியார்

நூல் வரலாறு

நாலடியார் ஒரு சிறந்த நூல். இது ஒரு நீதிநூல். நானூறு வெண்பாக்கள்
அமைந்திருக்கின்றன. நாலடி நானூறு என்ற மற்றொரு பெயரும் இதற்கு
உண்டு.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு
உறுதி;
இப்பழமொழி நாலடியாரின் பெருமையைக் காட்டும்; திருக்குறளின்
சிறப்பையும் உணர்த்தும். ‘‘நாலு’’ என்பது நாலடியார்; ‘‘இரண்டு’’ என்பது
திருக்குறள்.

‘‘பழகு தமிழ்ச்சொல் அருமை நாலிரண்டில்’’ என்பதும் நாலடியின்
சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும் காட்டும்.

இந்த நாலடியாரின் மாண்பை விளக்கும் மற்றொரு கதையும் உண்டு.
ஒரு காலத்திலே வட நாட்டிலே பெரும் பஞ்சம் உண்டாயிற்று;
எண்ணாயிரம் சமண முனிவர்கள் பஞ்சம் பிழைக்கப் பாண்டிய நாட்டுக்கு
வந்தனர். அவர்கள் மதுரையிலேயே தங்கினர். பாண்டிய
மன்னன் அவர்களை ஆதரித்து வந்தான்.

பஞ்சம் தீர்ந்தது; நாடு செழித்தது; முனிவர்கள் தங்கள் நாட்டிற்குப்
போக விரும்பினர். பாண்டியன் அவர்கள் செல்வதை விரும்பவில்லை.
தன்னுடைய நாட்டிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று
விரும்பினான்.