பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்149

New Page 1

‘‘செல்வம் நிலைக்காது; அழிந்துவிடும்; இளமைப் பருவமும் சிலநாட்கள்
தாம்; இளமைப் பருவம் கழிந்தால் கிழப்பருவம் வந்துவிடும்; நீர்மேல்
குமிழிபோன்றது உடம்பு; திடீரென்று மறைந்துவிடும். ஆகையால் செல்வம்
உள்ளபோதே-இளமைப்பருவம் இருக்கும்போதே-உயிரோடு வாழும்போதே-
உலக மக்களுக்கு நன்மை செய்யுங்கள். தந்நலந் துறந்து
வாழுங்கள். இந்தக் கருத்தையே முதல் மூன்று அதிகாரங்களிலும் உள்ள
முப்பது பாடல்களும் மொழிகின்றன.

திருக்குறளில் ஒரு அதிகாரத்தில் பத்துப் பாடல்கள் இருப்பதுபோலவே
நாலடியாரிலும் ஒரு அதிகாரத்தில் பத்துப் பாடல்கள் இருக்கின்றன. இவ்வாறு
நாற்பது அதிகாரங்களைக் கொண்ட நானூறு பாடல்களே நாலடியார்.
ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தலைப்பெயர்கள் உண்டு.

பழைய நூல்களிலே-சிறப்பாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே
உள்ள வெண்பாக்களில் நாலடியாரின் வெண்பாக்கள் மிகவும்
இனிமையானவை. இந்நூலை இரண்டு மூன்று முறை பொருள் உணர்ந்து
படித்தால் போதும்; அவ்வளவு வெண்பாக்களும் மனப்பாடமாகிவிடும்.
இதுதான் உயர்ந்த பாடல்களின் தன்மை.

சொல்லும் திறமை

சொல்லும் பொருளைத் தெளிவாக விளக்கிக் கூறுவதிலே நாலடிப்
பாடல்கள் மிகவும் சிறந்தவை. அப்பாடல்களிலே காட்டப்படும்
உவமானங்கள் அப்படியே உள்ளத்தைக் கவர்வனவாக இருக்கும்.

ஒரு மாமரம், அது நன்றாகக் காய்த்துப் பழுத்துக் குலுங்கியிருக்கின்றது.
ஒரே கிளையில் பழங்களும் இருக்கின்றன; காய்களும் இருக்கின்றன.
இச்சமயத்தில் ஒரு பெருங்காற்று