பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்157

New Page 1
  ‘‘தூய்த்துக் கழியான், துறவோர்க்கு ஒன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோன்.
 

தானும் அனுபவித்துக் கழிக்கமாட்டான்; செல்வம் அற்ற வறியோர்க்கும்
ஒன்றும் உதவமாட்டான்; பயனின்றிப் பொருளைச் சேர்த்து வைத்துவிட்டு
இறப்பான்; இவன் அறிவற்ற மடையன்’’.

(பா.273)

இவ்வாறு செல்வத்தைப் பற்றிப் பல பாடல்களிலே கூறப்படுகின்றன.
செல்வம்அனுபவிப்பதற்கே யன்றிச் சேர்த்து வைத்துப் பார்த்து மகிழ்வதற்காக
அன்று என்பதை ஒரு பாட்டு தெளிவாகக் கூறுகின்றது. செல்வத்தைச்
சேர்த்து வைத்துக்கொண்டு சும்மா பார்த்துக் கொண்டிருப்பவனும், செல்வம்
இல்லாதவனும் சமமானவர்கள் என்று அச்செய்யுள் எடுத்துக் காட்டுகின்றது.
 

  ‘‘எனது எனது என்றிருக்கும் ஏழை பொருளை,
எனது எனது என்றிருப்பன் யானும்,-தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன் துவ்வான்,
யானும் அதனை அது.
 

அறிவில்லாதவன் தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை
‘‘என்னுடையது, என்னுடையது’’ என்று நினைத்துக் கொண்டிருப்பான்.
அவனைப் போலவே யானும் அச்செல்வத்தை ‘‘என்னுடையது.
என்னுடையது’’ என்று எண்ணிக் கொண்டிருப்பேன். அது அவனுடைய
செல்வமாயிருக்குமானால் அவன் அதை எடுத்து அனுபவிப்பான்; பிறருக்கும்
கொடுப்பான்; அப்படி அவன் அதனைப் பிறருக்கு வழங்குவதில்லை; அதன்
பயனை நுகர்தலும் இல்லை. யானும் அச்செல்வத்தை அவனைப் போலவே.
பிறருக்குக் கொடுக்காமலும், அனுபவிக்காமலும் வைத்திருக்கின்றேன்.’’