பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்167

New Page 1
  தினைஅனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால்
பனைஅனைத்தா உள்ளுவர் சான்றோர்
 

என்பது நாலடியார். இவைகள் இரண்டும் ஒரே கருத்தைக் கொண்ட
செய்யுட்கள்.

இவ்வாறு நாலடியாரிலே திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றைக்
காணலாம். நாலடியாரைப் படிப்போர் அவைகளைக் கண்டுணரலாம்.

நம்பிக்கை, பழக்க வழக்கங்கள்

நாலடியார் காலத்திலே தமிழகத்து மக்களிடம் குடி கொண்டிருந்த பல
நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் இந்நூலிலே காணலாம்.

தர்க்கமும், சோதிடமும் பயனற்றவை. அவைகளிலே நம்பிக்கை
வைப்பதால் பயன் இல்லை. தர்க்க நூலைப் படித்துக்கொண்டு
பொழுதுபோக்குவதனால் எந்த நன்மையையும் அடைந்துவிட முடியாது;
சோதிடம் பார்த்துத் தம் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள
முடியாது. சோதிடம் பார்ப்பதால்-அதை நம்புவதால்-தம் வாழ்க்கையிலே
இன்ப துன்பங்களைத் தேடிக்கொள்ள முடியாது. தருக்கத்தையும்,
சோதிடத்தையும் நம்புகின்றவர்கள் பைத்தியக்காரர்கள்; அவர்களைக்
காட்டிலும் அறிவற்றவர்கள் எவரும் இல்லை.
 

  சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரில் பேதையார் இல்.                          (பா.52)
 

என்பது மேலே கூறி கொள்கையை வலியுறுத்துகின்றது.

பாம்பு மந்திரத்திற்குக் கட்டுப்படும் என்று நம்பினர். மந்திரித்த
திருநீற்றை வீசினால் படமெடுத்தாடும் பாம்பு அடங்கிவிடுமாம்; படத்தைச்
சுருக்கிக்கொள்ளுமாம்.