பக்கம் எண் :

172சாமி சிதம்பரனார்

New Page 1
  ‘‘சீரார் திருக்குறள், உத்தர
வேதம், திருவள்ளுவர்,
பேரார் பொய் யாமொழி,
வாயுறை வாழ்த்துப், பெருந் தெய்வநூல்,
ஊரார் பொதுமறை, முப்பால்,
தமிழ் மறை, ஒன்பதும் நல்
காராளர் கற்றுணர் செய்யுட்கு
நாமங்கள் கார்குழலே
 

இப்பழம் பாட்டினால் அவ்வொன்பது பெயர்களையும் காணலாம்.

திருக்குறள் அமைப்பு

திருக்குறள், குறள் வெண்பாக்களால் அமைந்தது. இரண்டே அடிகளால்
அமைந்த ஒருவகை வெண்பாவுக்குக் குறள் வெண்பா என்று பெயர். பெரிய
செய்யுட்களைவிடச் சிறிய செய்யுட்கள் மக்கள் மனத்திலே அப்படியே
ஒட்டிக்கொள்ளும். ஆதலால்தான், மக்கள் பின்பற்றி நடக்க வேண்டிய
நல்லுரைகளை நவில வந்த வள்ளுவர், சிறிய குறள் வெண்பாக்களால் தமது
நூலை இயற்றினார். இதுவே அவரது உயர்ந்த அறிவுக்கு ஒரு
எடுத்துக்காட்டு.

திருக்குறளிலே ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்கள்
அமைந்திருக்கின்றன. இவைகள் பத்துப் பத்துப் பாடல்களாகப்
பிரிக்கப்பட்டிருக்கின்றன. பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு அதிகாரம்.
அவைகள் நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாகக் காட்சியளிக்கின்றன.
ஒவ்வொரு அதிகாரத்திற்குத் தலைப் பெயர்கள் உண்டு. 1. கடவுள் வாழ்த்து,
2. வான் சிறப்பு. 3. நீத்தார் பெருமை, 4. அறன் வலியுறுத்தல்,
5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணை நலம், 7. மக்கட்பேறு,
8. அன்புடைமை’’ என்று இவ்வாறு 133 அதிகாரங்களுக்கும் தலைப்
பெயர்கள் உண்டு.