பக்கம் எண் :

174சாமி சிதம்பரனார்

New Page 1

மற்றொரு புலவர் ‘‘ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும்
படித்தால் போதும்; சிறந்த தமிழ்ப் புலவராகிவிடலாம். மற்றொருவரிடத்திலே
வேறொரு நூலையும் பாடங்கேட்க வேண்டியதில்லை’’ என்று திருக்குறளைப்
போற்றியிருக்கின்றார்.

திருக்குறளைப் போன்ற அதிகார அமைப்பும், பால் அமைப்பும்
கொண்ட நூல் திருக்குறளுக்கு முன் வேறு ஒன்றுமேயில்லை.

திருவள்ளுவர்

திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் ஒரு மாபெரும் புலவர்;
பல நூல்களையும் கற்றறிந்தவர்; உலகச் செய்திகள் பலவற்றையும்
உணர்ந்தவர். அவர் காலத்திலிருந்த சமுதாய நிலை; அரசியல் அமைப்பு;
எல்லாவற்றையும் நன்றாக அறிந்தவர். மனித சமுதாயம் நன்றாக வாழ
வேண்டும் என்னும் அன்பும் கருணையும் உள்ளவர்; (தனித்தனி) ஆண்கள்
பெண்கள் அனைவரும் மனிதத் தன்மையுடன், ஒழுக்கங் குன்றாமல் உயர்ந்த
நிலையிலே வாழவேண்டும் என்னும் கருத்துள்ளவர்.

திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு வரலாற்றைப் பற்றி உறுதியாக
ஒன்றும் கூற முடியவில்லை.

யாளிதத்தன் என்னும் அந்தணன். ஒரு சண்டாளப் பெண்ணை மணந்து
திருவள்ளுவர் முதலிய எழுவரைப் பெற்றான் என்பது ஒரு கதை. இது
ஞானாமிர்தம் என்னும் நூலில்காணப்படுகின்றது.

பகவன் என்னும் அந்தணன். ஆதி என்னும் புலைச்சியை மணந்தான்.
அவர்கள் யாத்திரை போகும்போது வழியிலேயே ஆதி ஏழு மக்களைப்
பெற்றாள். ஒவ்வொருபிள்ளையையும்