பக்கம் எண் :

New Page 1

 

3. ஐந்திணை ஐம்பது

நூல் வரலாறு

   இது ஐம்பது பாடல்கள் கொண்டது. ஐந்துதிணை யொழுக்கங்களைப்
பற்றிக் கூறுவது. முதலில் முல்லைத் திணை, இரண்டாவது குறிஞ்சித்திணை,
மூன்றாவது மருதத்திணை. நாலாவது பாலைத்திணை, ஐந்தாவது நெய்தல்
திணை என்ற வரிசையில் அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு திணையைப்
பற்றியும் பத்துப் பத்து வெண்பாக்கள் பாடப்பட்டிருக்கின்றன.

    ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்

   செந்தமிழ் சேராதவர்

   என்பது இந்நூலின் சிறப்புப் பாயிரம். ‘‘செந்தமிழின் பயனைப் பெற
வேண்டுவோர் இந்த ஐந்திணையில் உள்ள ஐம்பது பாடல்களையும்
படித்தறிய வேண்டும். அப்பொழுதுதான் செந்தமிழின் சிறந்த
பயனையடையலாம்; இன்பத்தை நுகரலாம்’’, இதுவே இதில் அடங்கிய
பொருள்.

    இந்நூலாசிரியர் பெயர் மாறன் பொறையனார் என்பது. மாறன்-
பாண்டியன்; பொறையன்-சேரன். பாண்டியன் பெயரையும், சேரன்
பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்ட பெயர் இது. பொறை என்பதற்குப்
பொறுமை என்ற பொருளும் உண்டு. பொறையனார் என்றால் பொறுமையை
உடையவர். மாறன் என்னும் பொறையனார் என்றும் பொருள் கூறலாம்.
இவரைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர் பாடிய
வேறு நூல்களும் இல்லை.