பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்21

New Page 1

கையை ஊன்றிக் கொண்டு நிற்பாள். அவள் நிலைமையை நாம் சென்று
காண்போம்’’

தாம் கூறிய உறுதி மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை
அக்கால மக்களுக்கு உண்டு. காதலன் எங்கு சென்றாலும் தன் காதலியை
மறப்பதில்லை. இக்கருத்தை இப்பாடலிலே காண்கின்றோம்.

மற்றொரு சிறந்த கருத்தமைந்த பாடலைக் காண்போம். காதலிக்கு
வயதேறிவிட்டது. அவள் தலைமயிர்கள் நரைத்துவிட்டன; காதலனுக்கு
மட்டும் இளமைப் பருவம் குறையவில்லை. ஆதலால் அவன் தன்
ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேசையர் சேரிக்குச் சென்றான். சில
நாட்கள் அங்கே தங்கியிருந்து திரும்பினான். காதலி தன் மீது
கோபங்கொண்டிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் அவள்
ஊடலைத் தணிப்பதற்காக அவளிடம் தூதனுப்பினான். அந்தத் தூதுவனிடம்
தலைவி கூறுகின்றதாக அமைந்துள்ளது அச்செய்யுள்.

‘‘தலைவனிடம் கோபித்துக் கொள்ளுவதற்கு எனக்கென்ன
தகுதியிருக்கின்றது? ஒரு காலத்திலே எனது கூந்தல் மெல்லிய
கருமணலைப்போல அசைந்து தொங்கிக் கொண்டிருந்தது. கண்ணுக்கு
அழகாகவும் இருந்தது. இன்றோ அக்கூந்தல் வெண்மணலைப் போல நிறம்
மாறிவிட்டது. ஆகவே நான் கிழவியாகிவிட்டேன். இனி எனக்கென்ன
கோபம்; நான் ஏன் தான் கோபிக்கப் போகின்றேன்?

 

 

தண்வய லூரன் புலக்கும் தகையமோ!
நுண் அறல் போல நுணங்கிய ஐம்கூந்தல்,
வெண்மணல் போல நிறந்திரிந்து, வேறுஆய
வண்ணம் உடையேம், மற்று யாம்’’.        (பா.27)