பக்கம் எண் :

22சாமி சிதம்பரனார்

இப

இப்பாடல் பண்டைக்காலப் பெண்ணின் இயல்பை உணர்த்துவது. தன்
கணவன் செய்தது தவறு என்று தெரிந்தும், அவனைத் தவறு செய்யாமல்
தடுக்கும் இயல்பு தன்னிடம் இல்லையே என்று வருந்தினாள் தலைவி.

ஒவ்வொருவரும் தமது இரகசியம் வெளிப்படாமல் காப்பாற்றிக்
கொள்வதிலே கவலையுள்ளவர்கள். தமது இரகசியத்தை மற்றவர்கள் கண்டு
கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு நேர்ந்துவிட்டால் அப்பொழுதுகூட விட்டுக்
கொடுக்கமாட்டார்கள். எதையாவது பொருத்தமாகச் சொல்லித்
தப்பித்துக்கொள்ளுவார்கள். இது மனித இயல்பு. இப்படிச் செய்வதிலே
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகவும் திறமைசாலிகள். இவ்வுண்மையை
இந்நூலின் செய்யுள் ஒன்றால் காணலாம்

ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி ஒன்றைத் தலைவி, தன் தோழியிடம்
உரைப்பதாக அமைந்திருப்பது அச்செய்யுள். அத்தலைவி தன் காதலனோடு
கள்ள நட்பு கொண்டிருப்பவள். இன்னும் அவளுக்குக் கற்பு மணம் நடைபெற
வில்லை.

‘‘கணவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்ச் சோலையைப் பார்த்து
அழுதுகொண்டிருந்தேன். அதனால் என் கண்கள் சிவந்துவிட்டன.
அப்பொழுது என் தாய் வந்தாள். எனது முகத்தைப் பார்த்தாள். ஒளியுடன்
இருந்த என் முகம் வாடியிருப்பதைக் கண்டாள். உடனே ‘‘உனக்குண்டான
துன்பம் யாது? ஏன் அழுதிருக்கின்றாய்? என்றாள். ‘‘கடல் அலை வந்து
எனது விளையாட்டு மணல் வீட்டைக் கலைத்துவிட்டது’’ என்றேன்.
 

  கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில் நோக்கி
உண்கண்சிவப்ப அழுதேன்; ஒளிமுகம்
கண்டு அன்னை எவ்வம் யாது என்னக், கடல்வந்து என்
வண்டல் சிதைத்தது என்றேன்’’                                             (பா.44)