பக்கம் எண் :

28சாமி சிதம்பரனார்

New Page 1

மற்றொரு செய்யுள் மிகவும் அருமையானது. கணவன்மேல் கருத்து
வேறுபட்ட காதலிக்குத் தோழி சமாதானம் கூறுவதாக அமைந்த செய்யுள்
அது. கணவன்மனைவிகளுக்குள் கருத்து வேறுபாடு வளர்ந்தால் அவர்கள்
வாழ்க்கையிலே இன்பம்இருக்காது. ஆகையால், காதலனுடைய நண்பர்களும்,
காதலியின் நண்பர்களும், அவர்கள் இருவருக்கும் சிறிது மனவேற்றுமை
ஏற்பட்டால்கூட உடனே அதைப்போக்க முயற்சிப்பார்கள். இதுவே தமிழ் மக்களின் பண்பு.

காதலன் பொருள் தேடப் போயிருக்கின்றான். அவன் பொருளைப்
பெரிதாக மதித்துத் தன்னைவிட்டுப் பிரிந்ததைப் பற்றிக் காதலியின்
உள்ளத்திலே ஒரு ஐயம் உண்டாகின்றது. நம்மைப் பற்றி அவன்
உள்ளத்திலே வைத்திருந்த அன்பு குறைந்து விட்டதோ என்று
எண்ணினாள். தலைவியின் இக்கருத்தைக் கண்ட தோழி அவளுக்குச்
சமாதானம் கூறினாள்.

‘‘கள்வர்கள் திரிந்துகொண்டிருக்கும் பாலைவனத்தைக் கடந்து
பொருள்தேடச் சென்றார் காதலர். அவர் உள்ளம் வேறுபட்ட
காரணத்தால்தான் நம்மைவிட்டுப் பிரியத் துணிந்தார், என்று நினைக்கின்றாய்
நீ! ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த தலைவியே! நீ
அப்படி நினைக்காதே! அவர் நம்மிடம் கொண்ட அன்பிலே சிறிதும்
குறைந்தவர் அல்லர். துன்பந்தரும், மலைப் பிளவுகளைக் கடந்து
பொருள்தேடச் சென்றவர், நாம் காணும்படி விரைவில் வருதலை நீ
காண்பாய்.

கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்

உள்ளம் பிரிந்தமை நீஅறிதி - ஒள் இழாய்!

தொல்லைவிடர் அகம் நீந்திப் பெயர்ந்தவர்,

வல்லைநாம் காணும் வரவு’’                         (பா.22)