பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்47

New Page 1

அழைக்கப்பட்டார். இவர் இந்நூலைத் தவிர வேறு எந்நூலையும்
இயற்றியதாகத் தெரியவில்லை.

செய்யுட் சிறப்பு

இந்நூலின் செய்யுட்கள் படிப்பதற்கு இனிமையானவை. இயற்கைக்
காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்திக் காட்டுவன. இந்நூலாசிரியர்
எடுத்துக்காட்டும் உவமானங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இயற்கையோடு இணைந்து காணப்படும். இந்நூல் பாடல்களின் சிறப்பைச்
சில உதாரணங்களால் காண்போம்.

கார் காலம் வந்துவிட்டது; பிரிந்து சென்ற காதலன் இன்னும்
வரவில்லை. காதலி பசலை நோயால் வருந்துகின்றாள். இந்த நிலையைக்
கண்டாள் தோழி, ‘‘காதலன் வந்துவிடுவான்; கார் காலத்தைக் கண்டால்
அவன் சென்ற இடத்திலே தாமதிக்கமாட்டான். நீ வருந்த வேண்டாம்’’
என்று ஆறுதல் கூறினாள். இந்தமுறையில் பல பாடல்கள்
அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒரு பாடல் கீழ் வருவது:
 

  ‘‘ஆடும் மகளிரின் மஞ்சை அணிகொளக்
காடும் கடுக்கை கவின்பெறப் பூத்தன;
பாடுவண்டு ஊதும்பருவம் பணைத்தோளி!
வாடும் பசலைக்கு மருந்து.        (பா.4)
 

நடனமாடும் பெண்களைப் போல மயில்கள் அழகாக ஆடுகின்றன;
காடெல்லாம் கொன்றை மலர்கள் கவினுடன் பூத்திருக்கின்றன; பாடுகின்ற
வண்டுகள் எல்லாம் மலர்களிலே உட்கார்ந்து ஊதுகின்றன; இதுதான் காதலர்
வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம்; மூங்கில் போன்ற அழகிய
தோளையுடையவளே! இப்பருவந்தான் நீ வருந்துகின்ற பசலை நோய்க்கு மருந்துமாகும்.’’