பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்55

New Page 1

மற்றொரு பாட்டிலே தச்சன் வேலை செய்யும் இடத்தையும்,
போர்க்களத்தையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இக்காட்சியைக் காணும்போது
யாருடைய உள்ளமும் உருகாமல் இருக்காது.

தச்சன் வேலை செய்யும் இடத்தைப் பார்த்தால் அலங்கோலமாகத்தான்
காணப்படும். வேலை செய்யும் ஆயுதங்கள் பல இடங்களிலே கிடக்கும்;
வெட்டப்பட்ட மரங்கள்; அறுபட்ட மரங்கள்; துண்டுபோடப்பட்ட மரங்கள்;
துளை போடப்பட்ட மரங்கள்; மரங்களிலே செதுக்கிய, இழைத்த, சிறியவும்
பெரியவுமான சிராய்த் தூள்கள்; இவைகள் எங்கு பார்த்தாலும் சிதறிக்
கிடக்கும்.

போர்க்களத்திலும் ஆயுதங்கள் பல சிதறிக்கிடக்கும்; பல பிணங்கள்
குவிந்து கிடக்கும்; தனித்தனியாகவும் கிடக்கும்; வீரர்களின் கால் கைகள்
துண்டிக்கப்பட்டுக் கிடக்கும்; உடல்கள் சிதைந்து உருமாறி எங்கும்
கிடக்கும். யானை, தேர், குதிரை முதலியவைகளும் சிதைந்து கிடக்கும்.
இத்தகைய போர்க்களத்திற்குத் தச்சுப்பட்டறையை ஒப்பிட்டது மிகவும்
பொருத்தமானது.
 

  ‘‘கொல்யானை பாயக் குடைமுருக்கி எவ்வாயும்
புக்கவாய் எல்லாம் பிணம் பிறங்கத், தச்சன்
வினைபடு பள்ளியில் தோன்றுமே செங்கண்
சினமால் பொருத களத்து.
 

கோபத்தையுடைய செங்கட்சோழன் போர் செய்த களத்திலே,
எவ்விடத்திலும், குடைகளையழித்துக் கொல்லுகின்ற யானைகள்
பாய்ந்து பொருகின்றன. அவைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்களே குவிந்து
கிடக்கின்றன. அவைகள் தச்சன் வேலை செய்கின்ற இடத்தைப் போலத்
தோற்றம் அளிக்கின்றன’’.