பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்97

New Page 1

நோக்கத்தக்கது. இதைக்கொண்டு இந்நூலாசிரியர் வடமொழிப்
பயிற்சியுள்ளவர்; வட நூல்களின் பொருள்களையும் இந்நூலிலே
கூறியிருக்கின்றார்; என்று எண்ணலாம். இதில் தவறில்லை.

சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் காரியாசான்; இவருடைய ஆசிரியர்
மாக்காயனார்,ஆதலால் இந்நூலாசிரியர் பெயரை மாக்காயனார்
மாணாக்கன் காரியாசான்
என்று அழைப்பர். இந்நூலிலே இன்று 97
வெண்பாக்கள்தாம் இருக்கின்றன. முதலில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று.
இறுதியில் பாயிரப் பாடல் ஒன்று. இரண்டையும் சேர்த்துக் கொண்டால் 99
வெண்பாக்கள்.

நூலின் பாடல்கள் மிகவும் எளியவை; இனியவை; என்று செல்லிவிட
முடியாது. மிகவும் கரடு முரடானவை என்று கூறிவிடவும் முடியாது.
நடுத்தரமானவை. நூலின் பெயரில் மூன்றில் இரண்டு சொல் வடமொழியாக
இருந்தாலும், நூலில் உள்ள வெண்பாக்களில் வடசொற்கள் அதிகம் இல்லை.
இது இவ்வாசிரியரின் தமிழ்ப் புலமையின் சிறப்பைக் காட்டுவது.

சிறந்த பாடல்கள்

சிறுபஞ்ச மூலத்திலே பல சிறந்த கருத்துள்ள பாடல்களைக் காணலாம்.
மக்களுக்கு அழகைத் தருவன இன்னின்னவை என்று இரண்டு
வெண்பாக்களிலே கூறப்படுகின்றன. அழகைப்பற்றிக் கூறும்
அவ்வெண்பாக்கள் மிகவும் அழகாகவே அமைந்திருக்கின்றன.
 


‘‘கண்வனப்புக் கண்ணோட்டம்; கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்;-பண்வனப்புக்
கேட்டார் நன்றுஎன்றல்; கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான் நன்றுஎன்றல் வனப்பு.