பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
120

    தலைக்கழகக் காலத்திலேயே, இற்றைத் தமிழெழுத்தைப் பெரும் பாலும் ஒத்த எழுத்துமுறை தோன்றிவிட்டது. தமிழெழுத்தினின்றே கிரந்தமும் தேவநாகரியும் திரிந்துள்ளன. அதனால், தமிழெழுத்துப் பல நூற்றாண்டுக் கல்வெட்டுத் தமிழுக்கு விலக்கப்பட்டிருந்ததாகத் தோன்றுகின்றது.

    சமற்கிருதமும் வேதமொழியும் உட்பட ஆரிய மொழிகளெல்லாம் அடிப்படையில் தமிழாயிருப்பதால், அதற்கு முரணான எழுத்து வரலாறு இனிச் செல்லாது.

    தமிழல்லாத பிற பெருமொழிகள் பிற்காலத்தனவாதலால், அவற்றின் வண்ணமாலைகள் படவெழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து, ஒலி யெழுத்து என்னும் நால்வகை நிலைகளைக் கடந்தமை வரலாற்றால் அறியக் கிடக்கின்றது. தமிழோ வரலாற்றிற்கெட்டாத தொல்பழங் காலத்திலேயே நெடுங்கணக்கு வண்ணமாலை தோன்றப் பெற்றதினால், அதன் வளர்ச்சி நிலைகளை இறைவன் தவிர வேறெவரும் அறிய முடியாது.

    இவ் வுண்மையை அறியாததனால், தி. நா. சுப்பிரமணியனார், எழுத்தின் ஒலிவடிவு வரிவடிவு என்னும் இருவகை வடிவுகளின் இருவேறு நிலைமைகளைப் பற்றிய யாப்பருங்கல விரிவுரை மேற்கோள் நூற்பாக் களைப் பிறழவுணர்ந்து, அவை எழுத்தின் நால்வகை வளர்ச்சி நிலைகளைக் குறிக்கின்றன வென்று எழுதிவிட்டார்.

    அந் நூற்பாக்கள் வருமாறு:

      1. உருவே யுணர்வே யொலியே தன்மையென  
  இருவகை யெழுத்தும் ஈரிரண் டாகும்.  
     
      2. காணப் பட்ட உருவம் எல்லாம்  
  மாணக் காட்டும் வகைமை நாடி  
  வழுவி லோவியன் கைவினை போல  
  எழுதப் படுவ துருவெழுத் தாகும்.  
     
      3. கொண்டவோர் குறியாற் கொண்ட அதனை  
  உண்டென் றுணர்த்துவ துருவெழுத் தாகும்.  
     
      4. இசைப்படு புள்ளின் எழாஅல் போலச்  
  செவிப்புல னாவ தொலியெழுத் தாகும்.  
     
      5. முதற்கா ரணமுந் துணைக்கா ரணமும்  
  துணைக்கா ரணத்தொடு தொடரிய வுணர்வும்  
  அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின்  
  மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை யெழுத்தே.

(யா.வி. பக். 535)

     

இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு: