பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்181

214. தமிழன் கண்ட கனா
பண் - (மோகனம்)
தாளம் - முன்னை
ப.
காணாத கனவொன்று கண்டேன் - களிகொண்டேன்
து. ப.
வீணாக இரவெல்லாம் விழித்திருந்த என் கண்ணே
தேனாருந் துயிலொன்று திளைத்த விடியற் கண்ணே
(காணாத)
உ.
மேலைத் திசையிற்பல மெல்லியலார் இறந்த
மேனியொன்றைத் தாயென்று பேணி விரையிற் கொண்டார்
கீழைத் திசையினின்று கிளர்ந்தொரு கிழத்தியே
கிளந்த வுறவால் அவள் கேடில்தாயென்று கண்டார்
(காணாத)
215. தமிழன் தன் தவறுகண் டிரங்கல்
'என் உயர் தவப்பயன் அம்மையே அப்பா' என்ற மெட்டு
பண் - (அடாணா)
தாளம் - முன்னை
தென்மொழி உலகினில் முன்மொழி யன்றோ
     திசையுறு கொடுந்தமி ழான
திரவிடத் தாய்மொழி செந்தமி ழன்றோ
     தேவரின் ஆரிய மொழிக்கும்
தெள்ளிய மூலமே தீந்தமி ழன்றோ
     திருத்தனி மொழிதமிழ் என்றே
தேற்றினர் மறைமலை யடிகளா ரன்றோ
     தமிழைமுன் தாழ்வெனக் கருதித்
தமிழென்று சொல்லவுந் தயங்கினேன் நாணித்
     தாயைத் தள்ளினேன் அருந்தமிழ்த் தாயைத் தள்ளினேன்.