பக்கம் எண் :

206இசைத்தமிழ்க் கலம்பகம்

247. இந்நாள் எவன் தமிழன்?
'பித்தாபிறை சூடீ' என்ற மெட்டு
பண் - இந்தளம்
தாளம் - ஈரொற்று
1
தென்பாலி முகத்தேயிருந் திங்கேகுடி தொடர்ந்தும்
தன்பால்தமிழ்ப் பற்றில்லெனில் தமிழன்என லாமோ
வன்பாரொடு கடல்தாண்டிய வடமேலைய னெனினும்
அன்பாய்த்தமிழ் கொள்வானெனின் அவனேநல்ல தமிழன்.
2
உள்ளேமனை வெளியேதமிழ் ஒன்றேமொழிந் தாலும்
தள்ளாத்தமிழ்ப் பற்றில்லெனில் தமிழன்என லாமோ
எள்ளாயினும் தமிழ்பேசவே இயலாதவ னெனினும்
அள்ளுறநற் றமிழ்கொள்பவன் அவனேநல்ல தமிழன்.
3
இனித்ததமிழ் நூல்கள்செய்யு ளெல்லாங் கரைகண்டும்
தனித்ததமிழ்ப் பற்றில்லெனில் தமிழன்என லாமோ
பனித்ததுளி யேனும்தமிழ் படியாதவ னெனினும்
அனித்தமெலித் தமிழ்கொள்பவன் அவனேநல்ல தமிழன்.
       அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலம்
குமரிநா டிருந்த ஞான்றே குடிபுகுந் திந்நாள் காறும்
தமிழையே பேசினாலும் தமிழரோ அதனைக் காய்வார்
இமிழ்திரை கடலுக் கப்பால் எனையசே ணாட்டா ரேனும்
அமிழ்துறழ் தமிழைப் போற்றும் அன்பரே தமிழர் கண்டீர்
               எனைய - எத்துணை