குறித்த
அளவுள்ளதன்று. மூவகை வாக்கியங்களுள் ஒன்றான கலப்பு
(complex)
வாக்கியம் வரம்பிறந்தோடுவது. மனுமுறைகண்ட வாசகத்தில்
பல பக்கங்கள் வருகின்ற அதிகாரங்கள் சில ஒவ்வொரே
வாக்கியமாக அமைந்துள்ளன. இங்ஙனம் ஒரு புத்தகம்
முழுமையும் ஒரே வாக்கியமாக்கலாம். புணர் (compound)
வாக்கியமும் வரம்பிறந்ததே. இனி, தனி (simple)
வாக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் அதுவும் பல
கருத்துகளைத் தழுவக்கூடியதாகின்றது. ‘இக் கரந்தை
மாணவன் இனிய தமிழ்நடை எளிதாய் எழுதுவான்’ என்னும்
வாக்கியத்தில் (1) கரந்தை மாணவன், (2) இனிய தமிழ்,
(3) எளிதாய் எழுதுவான் எனக் குறைந்தது மூன்று
கருத்துகளிலிருத்தல் காண்க. பல கருத்துகளைக் கூறும்
கலப்பு வாக்கியங்களையும் புணர்வாக்கியங்களையும்
பொருள் கெடாமல் தனி வாக்கியங்களாக மாற்றவு
முடியுமென்பதை, ஆங்கில விலக்கணங்களில் கண்டு தெளிக.
இனி, மூவகை வாக்கியமுங் கலந்த கலவை (mixed)
வாக்கியம் என்பதும் ஒன்றுண்டென வறிக.
மொழிநூற்படி நோக்கின், ஒவ்வொரு பகாச்
சொல்லும் ஒவ்வொரு கருத்தையும், ஒவ்வொரு
பகுசொல்லும் பற்பல கருத்துகளையும் குறிப்பன
வாகும். ஆ வா கண் என்னும் பகாச்சொற்கள் ஒவ்வொரு
கருத்தையே குறித்தன. ஆக்கம் வருவான் கண்ணன் என்ற
பகுசொற்கள் பற்பல கருத்துகளைக் குறித்தன. பின்னவற்றுள்,
வருவான் என்பது மூன்று கருத்துகளையும் ஏனைய இவ்விரு
கருத்துகளையும் குறித்தன. வருதற்றொழிலைக்
குறிக்கும் ‘வா’ என்னும் பகுதியும், எதிர்காலத்தை
யுணர்த்தும் ‘வ்’ என்னும் இடைநிலையும், ஆண்பாலை
யுணர்த்தும் ‘அன்’ என்னும் ஈறும் சேர்ந்தே
வருவான் என்னும் சொல் உண்டா யிற்று. ஆகவே, பகுதி
விகுதி இடைநிலை என்னும் சொல்லுறுப்புகளுங்கூட ஒவ்வொரு
பொருளை யுணர்த்துவன வாயின. இனி, பகாச்சொல்லுங்கூடப்
பல பொருள்களை யுணர்த்த இடமுண்டு. கண் (கள் <
கண்) என்னும் சொல் கருமையென்னும் குணமும் அதையுடைய
கண் என்னும் உறுப்பும் ஆகிய இருபொருள்களை யுணர்த்தல்
காண்க. கருமை என்னும் குணத்தைமட்டும் கருதுவது
பொருளும், அது கருமையுடையது எனக் கருதுவது
கருத்துமாகும். ஆகவே, ஒவ்வொரு பொருளும் கருத்தாகவும்
மாறக்கூடியது என்பதை அறிதல் வேண்டும்.
நெய்யே தொன்னைக்காதாரம் என்பதுபோலத்
திரிபிற் சிறந்த வடமொழியை இயன்மொழியாகக்
கொள்வாரே, இங்ஙனம் வாக்கியத்தை மொழியலகாகக்
கொண்டு இடர்ப்படுவர். மேலும், வடமொழியை உலக முதன்
மூலமொழியாகக் கொண்டு வலிப்பவர் மொழிநூல் மாணவராதற்குக்கூடத்
தகுதியற்றவராவர்.
ஆ, ஈ, ஊ என்னும் ஒலிகளை மொழி மூலவொலிகளாகக்
கூறுவது இன்று மலையேறிவிட்டதெனின், அது ‘குன்றின்மேலிட்ட
விளக்கு’ப்போல விளங்குதற்கு மலையேறிவிட்ட தென்க.
|