அயன்மொழி வழிபாடு நீண்ட காலமாக நடைபெற்று வரின், அது நீண்டகால வழுவேயன்றி நேரான முறையாகாது.
மேலும், சிவ மதமும் திருமால் மதமும் தமிழ் மதங் களாதலின் தமிழல்லாத மொழியில் வழிபாடு நடத்த இம்மியுந் தகுதியில்லை.
2. தெய்வப் படிமைக்குப் படைக்கும் பொருள்களை மக்கட்குப் பயன்படும் வகையிற் படைத்தல் வேண்டும். தேங்காய், பழம், திருச்சோறு, பூமாலை முதலியவை அடியார்க்கும் இரப்போர்க்கும் பயன்படும். ஆயின், குடங் குடமாய்ப் பாலைக் கொட்டுவதும் கலங்கலமாய் நெய் வார்த்து மலைவிளக் கெரிப்பதும், மன்னிக்கத்தகாத பொருளாட்சிக் குற்றமாகும். இவை இறைவனுக்கு முற்றும் ஏற்காதவை.
3. எங்கும் இருப்பதனால் (தங்குவதனால்) இறைவன் என்றும், மனமொழிமெய் என்னும் முக்கரணங்களையும் கடந்ததனால் கடவுள் என்றும், முதன் முதலாகக் கண்டு பெயரிட்டவன் தமிழனே. இறைவனுக்கு உருவமில்லை. அவனை உள்ளத்தில் எண்ணி வழிபடும் ஆற்றலற்றவர், உயிரினங்களுள் உயர்ந்த மாந்தன் வடிவிலாவது உருவமைத்து வழிபடுதல் வேண்டும். ஆனையும் பூனையுங் கழுதையுங் குதிரையும் போன்ற அஃறிணை வடிவில் அவனை வழிபடுவது, அவனுக்கு எத்துணை இழிப்பும் பழிப்பும் ஆகும் என்பதை எண்ணிக் காண்க.
ஒருவனது ஒளிப்படத்தில் (photograph) ஒரு சிறு மாற்றம் நேரினும், அவனுக்கு எத்துணை எரிச்சலுண்டாகின்றது. எங்கும் நிறைந்தவனும் எல்லாம் வல்லவனும் அறிவின் ஊற்றும் அன்பின் வடிவுமானவனும் ஆகிய இறைவன் உருவம், அஃறிணையிலும் இழிந்த இனமாகக் காட்டப் படுதல் எங்ஙனம் பொருந்தும்?
4. அறிவியல் கற்றபின்பும், அமெரிக்கர் திங்களை யடைந்த பின்பும், "அவனன்றி அணுவும் அசையாது" என்று சொல்லிக் கொண்டும், திருநள்ளாற்றில் காரிக்கோளை (சனிக்கிரகத்தை) வணங்குபவரின் மடமையை அரசு அறிஞரைக் கொண்டு அகற்றுதல் வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவனை வணங்குபவரே பல் தெய்வங்களையும் சிறுதெய்வங்களையும் ஐம்பூதங்களையும்.