பக்கம் எண் :

தமிழ்நாட்டு அரசின் கடமை127

எழுகோளையும் வணங்குவது, இறைவனை இறப்ப இழிவு படுத்துவதாகும். இக் குற்றத்திற்குப் புலவரும் புலமைபெற்ற துறவியரும் ஆளாவது மிகமிக வருந்தத் தக்கதே.

  5. ஆரியப் பூசாரியர், தமிழ்நாட்டு ஊர்களின் தூய தமிழ்ப் பெயர்களைத் திரித்து, பொதுமக்களின் பகுத்தறிவை மழுக்கக் கூடிய கட்டுக்கதைகளைப் புனைந்திருப்பது, தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு விளைவிப்பதால், அதனையும், அறிஞரைக் கொண்டு திருத்துதல் வேண்டும்.

  மரையென்னும் மான்வகை மிக்க காடு மரைக்காடு எனப்பட்டது. அப் பெயரை மறைக்காடு என மாற்றி, ஆரிய மறைகளான வேதங்கள் வழிபட்ட இடம் என்று கதை கட்டப்பட்டுள்ளது.

  வேதங்கள் பண்டை நாளில் எழுதப்படவில்லை. எழுதப் பட்ட பொத்தகங்களும் அஃறிணையாதலால், ஓதுவாரன்றித் தாமாக வழிபடா. சிவன் வேதத் தெய்வமு மல்லன். வேதங்கள் தமிழர்க்குப் பயன்படா.
 

"தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே"
"பாண்டி நாடே பழம்பதி யாகவும்"
என்று மாணிக்கவாசகரே பாடுதல் காண்க.

  திருவாவினன்குடியின் பொதினி யென்னும் மறுபெயர் பழனி யென்று திரிந்துள்ளது. அதைப் பழம் + நீ என்று பிரித்து ஒரு கதை கட்டப்பட்டுள்ளது.

  6. வடமொழி யென்னும் சமற்கிருதம் தேவமொழி யென்னுந் தவறான நம்பிக்கையினால், பல ஊர்ப்பெயர் தெய்வப்பெயர் ஆட்பெயர் மாற்றப்படவும், பல தமிழ்ச் சொற்கள் வழக்கறுமாறும் இறந்துபடுமாறும் வடசொற்கள் வேண்டாது புகுத்தப்படவும் நேர்ந்துள்ளது. இத் தவற்று நம்பிக்கையை,
 

"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
 பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
 மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
 எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ."
(திருவிளை. திருநாட். 57)
"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
 யுண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக்