பக்கம் எண் :

முன்னுரை13

குடிநிலை
"மண்டிணி ஞாலத்துத் தொன்மையு மறனுங்
 கொண்டுபிற ரறியுங் குடிமர புரைத்தன்று."
"பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
 வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
 கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
 முற்றோன்றி மூத்த குடி."
               (பு. வெ. 2:35)
  முதற்கால மாந்தன் முற்றும் இயற்கை விளைவையே சார்ந்து குகைகளில் வதிந்துவந்ததனால்,  அவன்  குறிஞ்சி  நிலத்திலேயே  தோன்றியிருத்தல் வேண்டும். மாந்தனின் நால்வகைப் படிமுறை நாகரிக வளர்ச்சிக்கேற்ற நானில அமைப்பு   தமிழகத்திலேயே   தலை   சிறந்திருப்பதனால்,  குறிஞ்சிநிலச் சார்புகொண்ட  தமிழ   மறக்குடியை,  "கற்றோன்றி.........மூத்தகுடி"  யென்று உயர்வுநவிற்சியாகப்   புறப்    பொருள்   வெண்பாமாலை   கூறியிருப்பது, உலகவரலா றறியாத முற்காலத்திற்கு ஏற்கா விடினும் இக்காலத்திற்கு முற்றும் ஏற்பதேயாம்.

  இற்றைத் தமிழ்நாட்டின் மேற்கில் மலையும் கிழக்கிற் கடலும் இருப்பது போன்றே, பண்டைத் தமிழகத்திலுமிருந்தது.  அதனால்  குடதிசை  மேற்கு என்றும், குணதிசை கிழக்கு என்றும் பெயர் பெற்றன. மேல் + கு = மேற்கு. கீழ் + கு = கீழ்க்கு - கிழக்கு. நாலாம் வேற்றுமைப் பெயர்கள் ஆட்சியில் முதல் வேற்றுமைப் பெயர்களாயின.

  முதலிரு கழகக்  காலத்தும்  மூவேந்தர்  முத்தமிழ்நாடு மிருந்தனவேனும், தெற்கில் முழுகிப்போன நாடு முழுதும் தென்னவன் நாடேயாதலால், இங்குப் பண்டைத்  தமிழகமென்று  கூறியது  பாண்டியன்   நாடேயாகும். மாந்தன் எத்துணை மாண்புடைச் சான்றோனாயினும் மாசுமறுவற்ற கடவுளல்ல னாதலின், நெட்டிடையிட்டு      அருகி     ஒரோவொரு      பாண்டியன் கொடுங்கோலனாயிருந்திருத்தலுங்   கூடும், ஆயின்,   அதை   மனத்திற் கொள்ளாவாறு, பாண்டியருள் மாபெரும்பாலார் செங்கோல் வேந்தராய்ச் சிறந்தோங்கின ரென்பது, எவரும் மறுக்கவொண்ணா வுண்மையாகும். இதற்கு,

"தென்னவன் நாட்டுச் சிறப்புங் கொள்கையும்
 கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின்
 வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத்
 தீத்திறம் புரிந்தோன் செப்ப.’’    
      (சிலப். 10 : 54-7)