பக்கம் எண் :

130மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

11. எச்சப்பிறவிகட்கு வேலையளித்தல்


  குருடர் நொண்டியர் முடவர் சப்பாணியர் முதலிய எச்சப் பிறவியர்க்கு வேலையளிப்பின், இல்வாழ்வார்க்குத் தொல்லை தரும் இரப்போர் கூட்டம் குறையும்.

  குருடர்க்கு நெசவு, முடைவு, பின்னல், இசைக்கருவி யியக்குதல், தொழிற்சாலைகளில் ஆணிவில்லை முதலிய வற்றை யெண்ணல், சொற்பொழிவாற்றுதல் முதலிய வேலைகட்குப் பயிற்சியளிக்கலாம்.

  நொண்டியரும் முடவரும் இயங்கிச் செய்யாத எல்லா வேலையுஞ் செய்யலாம்.
தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் வரவுப் பதிவேடுகளை வைத்திருப்பதற்குச் சப்பாணிகளே போதும்.

  போர்டு
(Ford) இயங்கித் தொழிற்சாலையை நிறுவிய அமெரிக்க முதலாளியாரான என்ரி போர்டு (Henry Ford) என்பவர், தாம் எழுதிய என் போர்டு இயங்கி (My Ford Car) என்னும் பொத்தகத்தில், நூற்றுக்கணக்கான குருடருக்கும் முடவருக்கும் வேலையளித் திருப்பதாகக் கூறியிருக்கின்றார்.
 

12. தொழுநோயர் குடியிருப்பு

  குட்டநோயாளரை யெல்லாம் ஊருக்கு மிகத் தொலைவிற் குடியேற்றி, மருத்துவஞ்செய்து, அவருக்குப் பயன் படுமாறு உழவும் நெசவும் பயிற்றுதல் வேண்டும்.


13. முதியோர் இல்லம்

  தாங்குவாரில்லாத முதியோரெல்லாம் தங்குவதற்கு, நாற்புறமும் தனியறை வரிசைகளும் நடுவில் திறந்தவெளியுங் கொண்ட சதுர வடிவான சத்திரங்களைக் கட்டி, செல்வருதவி கொண்டு அறநிலையங்களாகப் பேணிவரல் வேண்டும்.
இத்தகைய ஏற்பாடுகளால் இரப்போரே இல்லாதவாறு செய்து விடலாம். இதற்கு நகராட்சிகள் ஒரு வரியும் வாங்கலாம்.
 

14. தீயோரை நல்வழிப்படுத்தல்

  பொதுவாக, வேலையின்மையாலும் விளைவின்மையாலும் நேர்ந்த உணவின்மையே களவிற்குங் கொள்ளைக்குங்