சிலர் ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலத்தைக் கி.மு. 7,000 வரை பிற்பட வுயர்த்துவர். அதனால், தமிழின் தொன்மை யும் அதற்குத் தகத் தானேயுயரும். பேரன் பிறந்த ஆண்டு பிற்பட வுயர்த்தப்படின், பாட்டன் பிறப்பாண்டு தானேயுயர்தல் காண்க.
விவேகானந்தரும் அரவிந்தகோசரும் தமிழ மதங்களை ஆரியமென்று காட்ட விரும்பியதால், ஆரியரை வெளிநாட்டி னின்று வராத இந்திய ரென்றே கூறியுள்ளனர். ஆயின், அவர் வரலாறறிந்தவரன்மையின், அவர் கூற்றுக் கொள்ளத்தக்க தன்று.
உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூவகையெழுத்துகளொடு கூடியதும், முச்சுட்டொலிகளை முதலாகக் கொண்டதுமான நெடுங்கணக்கு, உலகில் முதன்முதல் தமிழிலேயே தோன்றிற்று.
நீண்ட காலமாக எழுதாக் கிளவியா யிருந்த வேதத்திற்குச் சமற்கிருதந் தோன்றியபின், தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றியே வண்ணமாலை ஏற்பட்டது. அது முதற்கண் கிரந்தமா யிருந்து, பின்னர்த் தேவநாகரியாக மாறிற்று. கால்டுவெலார் காலத்தில் தொல்காப்பியமும் பதினெண் மேற்கணக்கும் சிலப்பதிகாரமும் தமிழர்க்குந் தெரியாது மறைந்து கிடந்ததனாலும், இன்றுள்ள குமுகாய (சமுதாய) விழிப்புமின்றி அற்றைத் தமிழர் ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டிருந்ததனாலும், தமிழரின் குமரிநாட்டுத் தோற்றக் கொள்கை அன்று தோன்றாதிருந்ததனாலும், திரவிடர் வடமேலை வெளிநாட்டினின்று வந்தவர் என்னுங் கொள்கை வலுத்திருந்ததனாலும், தமிழ் நெடுங்கணக்கு வடமொழி வண்ண மாலையைப் பின்பற்றியதென்றும், தமிழ் நாகரிகந் தோன்றியது கொற்கைக் கொந்தென்றும், கால்டுவெலார் தவறாகக் கூற நேர்ந்து விட்டது. ஆயினும், தவறு தவறே.
பேரா.பி.தி. சீநிவாச ஐயங்காரையும் பேரா. வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதரையும் பின்பற்றாது, தம் ஆரிய வெறியால் தம் பெயரைக் கெடுத்துக்கொண்ட கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், ஆரியதிரவிடப் பண்பாட்டுத் தொடர்பு" (Cultural Contacts between Aryans and Dravidians)