தலைநகரான தில்லி நடுவிலிராது வடபாகத்தில் தள்ளியிருப்பதனாலும், தலைநகரை யடுத்துச் சூழ்ந்துள்ள வடநாட்டு மக்கள் தம்மைத் தென்னாட்டாரினும் சற்றுச் சிறந்தவராகவும், தம் மொழியே ஆட்சி மொழியாதற்குத் தகுந்ததெனவும் கருது வதாகத் தெரிகின்றது.
தென்னாடு பரப்பளவில் ஒடுங்கியிருப்பினும், வரலாற்று வகையிலும், மொழியிலக்கிய நாகரிகப் பண்பாட்டு வகையிலும், வடநாட்டினும் பன்மடங்கு சிறந்ததென்பதை அறிதல் வேண்டும்.
ஆதலால், இந்திய அரசு அரையாண்டு தில்லியிலும், அரையாண்டு ஐதராபாத்திலும் நடைபெறலாம்.
11. வீடமைப்புத் துறை
வீடமைப்புத் துறையின் நடவடிக்கைகளில், சொன்ன வண்ணஞ் செய்யாமையும், கருவியும் வேலைப்பாடும் தரங் குறைந்திருத்தலும், ஆண்டுதோறும் விலையையும் வாடகை யையும் உயர்த்துதலும், முன்பணம் பெற்றபின் மிகக் காலந்தாழ்த்துப் பணி தொடங்கலும், வீடும் நிலமும் வாங்குபவரின் பணத்திற்கு எத்தனை யாண்டாயினும் வட்டியின்மை யும், உடனுடன் சரியாகக் கணக்குப் பதியாமையும் பெருங் குறைகளாக இருப்பதால், ஓர் ஆய்வுக் குழு ஏற்படுத்திச் சட்டதிட்டங்களை மாற்றியமைத்தல் நன்றாகும்.
12. குலவகுப்பற்ற குமுகாய வமைப்பு
இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பிறவிக் குலப் பிரிவினை பெரு முட்டுக்கட்டையாயிருப்பதால், குடியரசு தலைவரும் தலைமை மந்திரியாரும் உம்பாற மன்றத் தீர்ப்பாளரும் (Supreme Court Judges) போன்ற உயரதிகாரிகள், பொருளற்ற குலப்பட்டங்களைத் தம் பெயருடன் இணைக்காது பிறருக் கெல்லாம் வழிகாட்டல் வேண்டும்.
குலப்பட்டங்களும் அவற்றின் பொருளும்
ஐயர் = அந்தணர், முனிவர், துறவியர்.
ஐயங்கார் = ஐய(ர்) அவர் - தெ. ஐயவாரு - ஐயகாரு-ஐயங்கார்.
ஆச்சாரி -
(ஆச்சார்ய) = ஆசிரியன், குரவன், சமயத் தலைவன்.