பக்கம் எண் :

34மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில ஈரறத் தார்க்கும் பொதுவென்பதை, கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை என்னும் அதிகாரங்கள் தெரிவிக்கும். ஓரறம் ஈரறத்திற்கும் பொதுவாயினும், இல்லறத்தில் எளியதாகவும் செயல்பற்றியதாகவும், துறவறத்தில் அரியதாகவும் கருத்துப்பற்றியதாகவும் இருக்கும். எ-டு: களவு செய்யாமை இல்லறம்; களவு செய்யக் கருதாமை துறவறம்.

"தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
 அம்மா அரிவை முயக்கு" (குறள்.
1107)
   என் அழகிய காதலியின் தழுவின்பம், ஒருவர் தம் சொந்த வீட்டிற் குடியிருந்து தாம் தேடிய பொருளைப் பலரொடும் பகிர்ந்துண்ணும் இன்பத்தை ஒத்ததாகும்.

   இந் நாற் குறளாலும் திருவள்ளுவர், உடையவர் தம் பொருளை இல்லாரொடு பகிர்ந்துண்ணும் கூட்டுடைமையைத் தெரிவித்தார். அவர் காலத்தில் மக்கட்டொகை மிகமிகக் குறைவு. நிலப்பரப்பில் முக்காற் பங்கு மரமடர்ந்த காடு; காற்பங்கு மக்கள் வாழும் நாடு. முத்தமிழ் நாட்டிலும் மக்கள் முக்கோடிக்குமேல் இருந்திருக்க முடியாது. நெட்டிடையிட்டு அரிதாக நேரும் பஞ்சந்தவிர, ஆண்டுதொறும் கோடைமழையும் காலமழையும் அடைமழையும் தப்பாது பெய்யும். நிலவளமும் நீர்வளமும் மிக்கிருந்தன. ஆகவே, உணவுத் தட்டும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலக்குறைவும் ஒரு சிறிதுமில்லை. ஆதலால், வறுமையால் வருந்தும் சோம்பேறியை நோக்கி,
"இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
 நிலமென்னும் நல்லாள் நகும்"
(குறள். 1040)
என்று கண்டித்தார் திருவள்ளுவர்.

   இனி, உழவதிகாரத்தையடுத்து நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை என்னும் நாலதிகாரங்களை வரிசையாக வைத்திருப்பதால் உழவை மேற்கொள்ளாவிடின் வறுமையும், வறுமையால் இரப்பும், இரப்பால் அஞ்சத்தக்க துன்பமும், அத் துன்ப மிகுதியால் கயமையும் (போக்கிரித்தனமும்) ஏற்படுமென்று குறிப்பாற் பெறவைத்தாரேனும்,
 
"இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
 இன்மையே இன்னா தது" (குறள். 1041)

"இன்மை எனஒரு பாவி மறுமையும்
 இம்மையும் இன்றி வரும்." (குறள். 1042)