பக்கம் எண் :

வள்ளுவர் கூட்டுடைமை35

"தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
 நல்குர வென்னும் நசை" (குறள். 1043)

என வறுமையைக் கடுமையாகக் கண்டித்தும்,


"இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
 அவர்பழி தம்பழி அன்று" (குறள். 1051)


  என்று ஒருசார் வறியரை ஒருசார் நன்மக்களிடம் இரக்க ஏவியும் இருப்பதால், தனிப்பட்டவன் தவற்றாலன்றி வேறு வழிகளாலும் வறுமை நேருமென்றும், அத்தகைய வறுமையை நன்மக்களும் அரசனுமே நீக்கவேண்டுமென்றும் அறிந்து, அவ் வறத்தைச் செய்யுமாறு ஆங்காங்குத் தனிக் குறள்களால் ஏவியதுமட்டுமன்றி, ஒப்புரவறிதல், ஈகை என்னும் ஈரதிகாரங்களையும் அமைத்தார் திருவள்ளுவர் என்று தெரிகின்றது.


2. வறுமையடையும் வகைகள்
 

  இயற்கை: களைகண் (ஆதரவு) இன்மை, உறுப்பின்மை, தீராநோய், சேதநேர்ச்சி (வெள்ளம், கடல்கோள், தீப்பிடிப்பு, நிலநடுக்கம்).

  செயற்கை: சோம்பல், கல்லாமை அல்லது தொழில் பயிலாமை, குடி, விலைமகள்கூட்டு, சூது, களவு, கொள்ளை, போர், கடன்படல், கடன் கொடுத்தல், வீண் செலவு, பன்மக்கட் பேறு, பகைவர் செயல், வழக்கீடு, அரசு கவர்வு, வணிக இழப்பு, போட்டி, கூலி அல்லது சம்பளக் குறைவு, செய்பொருள் விலையாகாமை, நேர்மைக் கொள்கை, தாய்மொழி தாழ்த்தப் படுகை, வைப்பக (Bank) நொடிப்பு, தொழில் தாழ்வு, தீண்டாமை, ஒழுக்கமின்மை, வேலையின்மை, அழிபொருளாக மாற்றிய உடைமையைப் பேணாமை.

  இவற்றுட் சில இடைக்காலத்தன; சில இக்காலத்தன. அழி பொருளாக மாற்றிய உடைமையைப் பேணாமை என்பது, முழுச் சொம்மையும் (சொத்தையும்) தாட்காசாக
(Currency notes) மாற்றிக் கறையான் (செதில்) அரிக்கவிடுதல் போல்வது.
இன்மை, எளிமை என வறுமை இருதிறப்படும். முன்னது ஒன்று மின்மை; பின்னது சிறுவீட்டிற் குடியிருந்து குறைவாக உண்டுடுத்து வருந்தி வாழ்தல்.

  இன்மை உழைக்க வியலாமையால் ஏற்படுவது. அது உறுப்புக் குறைவு, நோய், முதுமை, களைகணில்லாச் சிறுபருவம், துறவு ஆகிய ஐந்நிலைமைகளில் நேரக்கூடும். அந்நிலைமையர்