பக்கம் எண் :

முன்னுரை9

  குமரிமுனையினின்று  வடக்கு  நோக்கிப்  பனிமலை  வரை  ஒரு கோடிழுத்தால்,  கிழக்கிலுள்ளதெல்லாம்  முதற்காலச்  சோழ  நாடென்றும் மேற்கிலுள்ளதெல்லாம் முதற்காலச் சேர நாடென்றும் அறிதல் வேண்டும். மூவேந்தராட்சியும், பெரும்பாலும் செங்கோலும் ஒரோவொரு கால் அருகிக் கொடுங்கோலுமாக இருந்ததாகத் தெரிகின்ற கோவரசாகும் (Monarchy). அது உலக முதலாட்சி யாதலால், அதினுஞ் சிறந்ததாக அத்துணைப் பழங்காலத்தில் இருந்திருக்க முடியாது.

  மூவரசியங்களுள் ஒவ்வொன்றும் பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் பல கோட்டங்களாகவும், கோட்டங்கள் பல கூற்றங்களாகவும், கூற்றங்கள் பல வளநாடுகளாகவும்,  வளநாடுகள்  பல  நாடுகளாகவும் பகுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு   நாடும்  தனியூர்  என்னும்  பேரூர்களையும்  பற்று  அல்லது  குறைப்பற்று என்னுஞ் சிற்றூர்களையும் கொண்டிருந்தது.

  மண்டலங்களைப் பெரும்பாலும் அரசக் குடும்பத்தினரே துணையரையர் போல  ஆண்டுவந்தனர்.  பழம்  பாண்டிநாடு  ஐந்து  மண்டலங்களாகப்  பகுக்கப்பட்டிருக்கலாம்.  ஐந்துணை  யரையரால்  பாண்டியன் அஞ்சவன் எனப்பட்டிருக்கலாம்.  அது  பிற்காலத்திற்  பஞ்சவன் என்று மெய்ம்முதல் பெற்றிருக்கலாம். (ஒ.நோ: அப்பளம்-பப்பளம் - பப்படம்). மண்டல ஆள்நர் மண்டலவர் - மண்டலகர் எனப்படுவர்.

  மற்றப் பிரிவுகளை மாவரையன், விழுப்பரையன், வேளான், நாடாள்வான் முதலிய சிறப்புப் பெயர் பெற்ற பல்திறத்த அதிகாரிகள் ஆண்டு வந்ததாகத் தெரிகின்றது.

அரசனின் ஆட்சித் துணைவர்
  1. ஐம்பெருங்குழுவார்: அமைச்சர்,பெரும்படைத்தலைவர், தூதர், ஒற்றர், பூசாரியர்.
  2. எண்பேராயத்தார்: கருமத்தலைவர், கணக்கர், கருவூலத் தார், படைத்தலைவர், குதிரைமறவர், யானைமறவர், நகரமாந்தர், வாயிற்காவலர்.

    நகரமாந்தர் என்றது நகரங்களில் வதிந்த காசு வணிகரை.