பக்கம் எண் :

106

1.1.4 சொற்சேர்க்கையில் நெருடல்
 
     ‘குயில்’ என்னும் பறவை ஒலி எழுப்புவதை ‘கூவுதல்’ என்ற சொல்லால் குறிப்பிடுவது
தான் மரபு. ‘குயில் கூவுகிறது’ என்பது சரியான சொற்சேர்க்கை. இது போன்று மொழியில்
பல இயல்பான சேர்க்கைகள் உண்டு. அவற்றை மாற்றுவது படிப்பவர்களுக்கு நெருடல்
உணர்வைத் தரும்; எழுதுபவர் மொழிப்பயிற்சி இல்லாதவர் என்ற உணர்வையும் தரும்.
 
(10) இந்த நிலையில், 1990ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும்
குடிநீர் வழங்கும் இலக்கை எட்டுவது கேள்விக்குறியாகத்
திகழ்கிறது.
 
     ‘திகழ்தல்’ என்ற வினை ‘சிறப்புடன் இருத்தல்’ என்னும் பொருள் உடையது.
கேள்விக்குறி’ என்பதற்கு இந்தப் பொருள் கொண்ட வினை தேவை இல்லை.
‘கேள்விக்குறியாக இருக்கிறது’ என்பது இயல்பான சொற்சேர்க்கை.
 
(11) உன் அப்பாவுக்கு ரயில் மோதிச் சாவு நடக்கப்போகிறது.
 
      ‘சாவு நடக்கப்போகிறது’ என்பது பொருத்தமற்ற, செயற்கையான சொல் இணைவு.
‘சாவு நேரப்போகிறது’ என்பதே பழக்கமானதும் பொருத்தமானதும் ஆகும்.
 
  (12) ...எந்தக் கட்சி ஜெயித்தாலும் தேர்தல் முடிவுகள் பற்றிக்
காட்டமான கேள்விகள் கிளப்பப்படும் என்பது நிச்சயம்.
 

   ‘கேள்வி’ எழுப்பு’ என்ற இயல்பான சொற்சேர்க்கையை விடுத்து ‘கேள்வி கிளப்பு’ என்று
இணைத்துப் பயன்படுத்தியிருப்பது பொருத்தமாக இல்லை

    மொழியில் சில தொடர்களை எதிர்மறை வடிவத்தில் அல்லது உடன்பாட்டு வடிவத்தில்
மட்டும் பயன்படுத்துவது உண்டு. எதிர்மறை வடிவத்தில் மட்டும் வழங்குவதை உடன்பாட்டு
வடிவத்திற்கோ உடன்பாட்டில் வழங்குவதை எதிர்மறை வடிவத்திற்கோ மாற்றுவது
தொடர்களின் இயல்புக்கு முரணாக அமைந்து பொருள் எளிதாகப் புலப்படுவதைத்தடுக்கிறது.
  

  13) நாட்டுத் துப்பாக்கிகளையும் வெடிமருந்துகளையும் இங்கேயே தயாரிக்கிறோம் எனப் பெருமை பிடிபடக் கூறினார்.