பக்கம் எண் :

பொது இயல் 127


விரிவாய்க் கூறுவது. இது 1637-ல் இராமநாதபுரச் சேதுபதியோடு
இராமப்பய்யர், நடத்திய போரைக் குறிப்பிடுகிறது. இராமப்பய்யர்
தேவர் நாட்டின் மீது படையெடுக்க எண்ணித் திருமலை நாயக்கரை
நோக்கி,

"ஆண்டவனே,இப்போ அடியேன் சொல் விண்ணப்பங்கேள்!
மதுரை நாடாளும் மன்னவனே, நீர்கேளும்"

என்று வேண்ட, மன்னர் திருமலை,

"விருதுபுகழ் இராமாநீ வீரியங்கள் பேசாதே!
....................................................................................
வேண்டாம் அடாராமா வீரியங்கள் பேசாதே"

என்று கூறினார். இப்பாடலில் ‘வேண்டாம்’ என்னும் சொல்
கி.பி 17 ஆம் நூற்றாண்டு நூலில் புகுந்து விட்டது என்பதைக்
காணலாம். மற்றும் மிகவும் பிற்கால நீதி நூலாகிய உலக நீதியும்.

"இருதாரம் ஒருநாளும் கொள்ள வேண்டாம்"

என்று பாடியிருப்பதைக் காண்கிறோம். ஆதலால், வேண்டாம்
என்னுஞ் சொல்லை ஏற்றுக் கொள்வது தவறாகாது எனலாம்.

வலது பக்கம், இடது பக்கம் - வலப்பக்கம், இடப்பக்கம் என்பவையே
சரியானவை. எனினும், இக்காலத்தில் வலது பக்கம், இடது பக்கம்
என்பவை பெருவழக்காக வழங்கி வருகின்றன. இவற்றை இருபெயரொட்டுப்
பண்புத் தொகைகளாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளலாம் போலும்.

முயற்சித்தார் - இச்சொல்லைச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
முயற்சி என்னும் தொழிற்பெயரிலிருந்து வினைமுற்றை உண்டாக்க
வேண்டுவதில்லை. முயற்சித்தல் என்பது தவறு. இதை ஏற்பது கூடாது.
முயற்சி செய்தார் அல்லது முயன்றார் என்றெழுதுக.