|
New Page 1
மேனாட்டானென்று தலைகீழாகக்
கொண்டதனாலேயே, சமற்கிருத நெடுங்கணக்கினின்று தமிழ் நெடுங்கணக்குத் தோன்றிற்றென்றும், தமிழ்
வேற்றுமைப் பாகுபாடு சமற்கிருத வேற்றுமைப் பாகுபாட்டைத் தழுவியதென்றும், கால்டுவெலாரும்;
g,
j, d, t. b ஆகிய ஆரிய எடுப் பொலிகள் க, ச, ட, த, ப ஆகிய தமிழ் எடுப்பிலா வொலிகளாக
மாறினவென்று பர். (Dr.) சு. கு. சட்டர்சியும்; வ்ருத்த என்னும் வடசொல் பிராகிருதத்தில் வட்ட
என்றும் தமிழில் வட்டம் என்றும் திரிந்ததென்று வடமொழியாளரும்; தலைகீழாக உரைப்பாராயினர்.
2. எல்லாச் சொல்லும்
பொருள் குறித்தனவென்பது
“எல்லாச் சொல்லும்
பொருள் குறித்தனவே.”
(பெயரியல்,1)
என்பது தொல்காப்பிய
நூற்பா’’
தமிழ் இயன்மொழியாதலால்,
அதிலுள்ள பெயர் வினை யிடை யென்னும் மூவகைப்பட்ட எல்லாச் சொல்லும், வேர்ப்பொருளுணர்த்தும்
கரணியக் குறிகளே. ஆரியம் திரிமொழியாதலின், அதிலுள்ள சில பல சொற்கள், மேன்மேலுந் திரிந்து
முதனிலையுருத் தெரியாவாறு முற்றுஞ் சிதைந்து, வேர்ப்பொருள் அறிய முடியா நிலையில் உள்ளன. அதனால்,
வடமொழியிலக்கண நூலார், வேர்ப்பொருள் விளங்காச் சொற்களை இடுகுறி யென்றனர். ஆயின், இவற்றை
வண்ணனைமொழி நூலாரோ, எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியென்றொரு நெறியீடு செய்து, தம் இரு
கண்ணையும் இறுகக் கட்டிக்கொண்டனர்.
எல்லாச் சொல்லும்
பொருள் குறித்தனவேனும், வேர்ப்பொருள் சிலவற்றில் விளங்கித் தோன்றும்; சிலவற்றில்
விளங்கித் தோன்றாது. அதை ஆய்ந்தே காணல் வேண்டும். இதனையே,
“மொழிப்பொருட் காரணம்
விழிப்பத் தோன்றா”
(உரியியல்,
96)
என்று குறித்தது தொல்காப்பியம்’’
எ-டு:
சுல்-சுள்-சுடு-சுடல்-சுடலை
(விழிப்பத் தோன்றல்)
புல்-புள்-புழு-புழல்-புடல்-புடலை (விழிப்பத் தோன்றாமை)
காலஞ் சென்ற வையாபுரியார்,
பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலக முழுதும் இருண்டுவிட்டதென்று கொண்டாற்போல, தம் அறியாமையைத்
தொல்காப்பியர் மீதும் ஏற்றி, "Tolkappiyar only says that the origin of words is
beyond ascertainment" என்று கூறிவிட்டார்.
வட மொழியென்னும் சமற்கிருதத்தில்
ஐந்தி லிருபகுதி தமிழாத லால், அதை மறைத்தற்பொருட்டுப் பல வடசொற்கட்குப் பொருந்தப்
பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறி வருகின்றனர்.
|