கடைக்கழக மரபினர் உதியஞ்சேரல், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், செங்குட்டு வன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முதலியோர். செங்குட்டுவன் வடநாட்டின்மேற் படையெடுத்துச் சென்று ஆரியவரசரை வென்று, நாவலந்தேச முழுதும் தன்னடிப் படுத்தினான். மாந்தரம் பொறையன் கடுங்கோ, கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரலிரும்பொறை, அந்துவஞ்சேரலிரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, இளஞ்சேரலிரும்பொறை, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை, கணைக்காலிரும்பொறை முதலியோர். கடைக்கழகக் காலத்தில், தகடூர் என்னும் தருமபுரியில், அதிகமான் நெடுமான் அஞ்சி, அதிகமான் பொகுட்டெழினி முதலிய அதிகர் மரபினர் ஆண்டுவந்தனர். 13ஆம் நூற்றாண்டிலும் அம் மரபைச் சேர்ந்த விடுகாதழகிய பெருமாள் என்னும் சிற்றரசன் இருந்திருக்கின்றான். மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுப் பகுதியில், 8ஆம் நூற்றாண்டில் குலசேகர ஆழ்வாரும், 9ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் நாயனாரும் ஆண்டனர். மலைக்குக் கிழக்கிலுள்ள சேரநாட்டுப் பகுதியில், தென்பாகம் (கோயம்புத்தூர் வட்டம்) கழகக்காலத்திலேயே கொங்குநாடெனப் பிரிந்து விட்டது. பின்பு சில நூற்றாண்டுகட்குப்பின் வடபாகமும் (சேலம் வட்டம்) கங்கபாடி எனப் பிரிந்துவிட்டது. மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுத் தமிழர் 14ஆம் நூற்றாண்டில் மலையாளியராகத் திரிந்துவிட்டனர். மைசூர்நாடு 12ஆம் நூற்றாண்டு போல் கன்னட நாடாக மாறிவிட்டது. தெலுங்கர் 8ஆம் நூற்றாண்டி லேயே கொங்கு நாட்டிற் குடியேறத் தொடங்கிவிட்டனர். ஆதியில் நாவலந்தேசம் முழுதும் திரவிடரே பரவியிருந்தனர். மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற நகரங்களில் வாழ்ந்த மக்கள், ஆரியப் பேரையு மறியாத திரவிடரே. மேலை யாசியாவிலுள்ள பாபிலோனுக்குச் சென்று அங்கு நாகரிகத்தைப் பரப்பிய சுமேரியரும் திரவிடரே. நாவலந்தேசம் முழுதும் சேர சோழ பாண்டியரென்னும் முத்தமிழ் வேந்தரடிப்பட்டிருந்தது. தெற்கே பஃறுளியாறு வரையில் பரந்திருந்த நாடு பாண்டிநாட்டின் பெரும் பகுதியாகும். சோழநாடு பனிமலைவரை எட்டியிருந்தது. மேல்கரை நாடுமுழுதும் சேரநாடாகும். சேர சோழ பாண்டியரே, முறையே, நெருப்பு (அக்கினி), கதிரவன் (சூரியன்), திங்கள் (சந்திரன்) என மூன்று குலமாகக் கூறப்பட்டனர். வடநாட்டில், |