பக்கம் எண் :

தமிழர் வரலாறு-161

யானையை மணி கட்டாது தெருவழிச் செல்லவிடுவதில்லை. அதனால், "யானைவரும் பின்னே,மணியோசை வரும் முன்னே" என்ற பழமொழியெழுந்தது.

"மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா" 

(இன்னா.14)

என்றார் கபிலர்.

வழக்கிழந்தோ பெருந்தீங்கு செய்யப்பட்டோ அரசனிடத்தில் முறையிடுவோர் அசைக்குமாறு, அரண்மனை வாயிலிற் கட்டப் பட்டஆராய்ச்சி மணி வெண்கல மணியே.

""வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன்
அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்" 

(சிலப்.20:53-5)

"ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெங்கும்
நீடுங் குடையைத் தரித்தபி ரானிந்த நீணிலத்தில்
பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்

சூடுங் குலோத்துங்கச் சோழனென் றேயெனைச் சொல்லு வரே"என்பது, ஒட்டக்கூத்தரும் இரண்டாங்குலோத்துங்கச் சோழனும் முன்னீரடியும்பின்னீரடியுமாகப் பாடிய தனிப்பாடல்.

பொதுமக்கள் நேரமறியுமாறு,நாழிகைதோறும் அடிக்கக் கோபுரத்திற் கட்டியபெருமணி கோபுர மணியாம்.

உறுதியும் பார்வையுள்ளதும், போதியஅளவு கிடைக்கக் கூடியதும், பெரும்பாலுங் களவுங்கொள்ளையும் போகாததும் ஆன மாழை உறையே யாதலால்,அதிலேயே சிறியவும் பெரியவுமான தெய்வப்படிமைகளும் மக்கட்படிமைகளும் வார்க்கப்பட்டன.

உறைக்காலத்தில் நெய்தல்நிலமக்கள் கப்பல், நாவாய் முதலிய பெருங்கலங்களிற்சென்று, அக்கரை நாடுகளிலும் அவற்றையடுத்ததீவுகளிலுமுள்ள பல்வகை அரும்பண்டங்களைக்கொண்டுவந்து நீர்வாணிகத்தைப் பெருக்கினர்.

ஆட்சித்துறையில் கோவினும் பெரியவேந்தன் தோன்றி, ஐந்திணை யரசரையும் அடக்கியாண்டான். தனக்கொரு தனிச் சிறப்பு வேண்டி,முடியணியும் உரிமையைத் தனக்கே கொண்டான்.இதனாலேயே, அவன் வேந்தன் எனப்பட்டான்.

மே = மேல். மே - மேய். மேய்தல் = விலங்கு புல்லின் மேற் பகுதியைத் தின்னுதல், கூரையின்மேல் வைக்கோலிடுதல்.

மேய்-வேய். வேய்தல்=கூரையின்மேல் வைக்கோலிடுதல், ஒற்றன் ஒரு கோலத்தை மேற்கொண்டு உளவறிதல், தலைமேல் மகுடமணிதல்.